“என்னால மேனேஜ் பண்ண முடியாது தாத்தா” என்றாள் கண்கள் கலங்க.
“ராசசிங்கன் வரேன்னு சொல்லி இருக்காருடா... அவரோட சேர்ந்து பேட்டி குடு. அவர் எல்லாவற்றையும் பார்துக்குவாரு” என்று சொல்லி அவளை தேற்றி எடுத்தார்.
“லைட் எல்லோ சேரி கட்டு” என்று அவளது போனுக்கு செய்தி வந்தது ராசசிங்கனிடம் இருந்து.
அதை பார்த்தவளுக்கு கடுப்பாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லாது அந்த மாதிரி வண்ணமாய் பார்த்து எடுத்து கட்டினாள். நீண்ட நாட்களுக்கு பிறகு அலங்காரம் செய்தாள். அவளுக்கு அவளே புதிதாக இருப்பது போல தோன்றியது. அழுதழுது கண்கள் எல்லாம் உயிரை இல்லாதது போல ஒளி இழந்து, உண்ணாத உடல் வேறு இன்னும் மெலிந்து போய் இருக்க தான் தானா இது என்று அதிர்ந்துப் போய் பார்த்தாள்.
தன் தோற்றம் மாறிப் போய் இருந்ததால் இன்னும் கொஞ்சம் மெனக்கெடுத்து ஒப்பனை செய்துக் கொண்டவள் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
அவளது பேசிக்கு அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தாள்.
“மேம் எல்லாம் ரெடி. நீங்க கீழ வாங்க” என்று கதிர் அழைக்க கொஞ்சமே கொஞ்சம் படபடத்துப் போனாள். என்ன கேள்வி வருமோ என்று பயந்துப்போனாள்.
வீட்டு தோட்டத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அங்கே அனைவரும் கூடி இருந்தார்கள். இவள் வருவதை பார்த்து புன்னகையுடன் எழுந்த ராசசிங்கன் அவளிடம் ஒரு கையை நீட்டி அவளின் கையை பற்றி அழைத்துக் கொண்டு வந்து தன் இருக்கைக்கு அருகே அமரவைதுக் கொண்டு அவளுடன் குனிந்து இரகசியம் போல ஏதோ ஒன்றை சொன்னான்.
அவள் லேசான சிரிப்புடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அந்த சிரிப்பில் உயிர் இல்லை என்பதை அவள் மட்டும் அறிந்தாள்.
“இங்க பாரு எல்லோருக்கும் முன்னாடி ஆதர்சன இணையாக காட்டிக்கனும். அதனால என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி வெட்கப்படுற மாதிரி நீ ஆக்ட் பண்ணனும்” என்று கட்டளையாக சிரித்தபடி சொன்னான். ஆனால் அதை மற்றவர்கள் பார்க்கையில் காதல் இரகசியம் போல என்று தான் எண்ணுவார்கள். அப்படி நடித்தான் ராசசிங்கன்.
முரண்டு பிடிக்க நொடி ஆகாது தான். ஆனால் தங்கள் வீட்டின் மானமும் அல்லவா சேர்ந்து போகும். எனவே அவனது ஆணைக்கு இணங்கிப் போனாள்.
பெரிதாக காது கூசும் அளவுக்கு கேள்விகள் வர எல்லாவற்றையும் ராசசிங்கனே பதில் கொடுத்தான். இவள் வாயையே திறக்கவில்லை. தேவை படும் நேரத்தில் மட்டும் ஓரிரு சொற்களை மொழிந்தாள்.
இருவரும் கட்டி பிடித்தது போல போஸ் குடுக்க சொல்ல அவனை நெருங்கி நின்றாள் ஏந்திழையாள். அவனும் அவளின் இடையை பிடித்து தனக்கு நெருக்கமாக கொண்டு வந்து நிறுத்தி கட்டிக் கொண்டான். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து போஸ் கொடுத்தனர்.
எல்லோருக்குமே இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுது மேட் பார் ஈச் அதர் போலவே தோன்றியது. உருவ ஒற்றுமை அப்படி பொருந்தி போய் இருந்தது.
அப்படி நெருங்கி நின்ற நேரம் அவனது வெற்று மார்பு அவளின் கன்னத்தோடு உரசி சென்றது. அதில் பெரிதும் படபடப்புக் கொண்டாள்.
“சேர்ட் போடுறது தான் போட்டாரு. அதை எதுக்கு மூணு பட்டன் திறந்து வச்சி போடணும். முழுசா போட்டா தான் என்னவாம். என்னை பாரு என் அழகை பாருன்னு திண்ணிய நெஞ்சை காட்டனுமாக்கும்” பொருமிக் கொண்டாள்.
“கிஸ் பண்ற மாதிரி சார்” என்று ஒருவர் கேட்க அதிர்ந்துப் போனாள். அவளின் கண்களை பார்த்து நெற்றியில் முத்தமிடுவது போல நெருங்கி வந்தான். அவளது கண்கள் அதிர்ச்சியுடன் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
“என்னடி சின்ன முத்தத்துக்கே இப்படி பயப்படுற... நாளை கழிச்சு மொத்தமும் எடுத்துக்குவனே அப்போ என்ன பண்ணுவ” என்று நக்கலாக கேட்டுக் கொண்டே அவளின் நெற்றியில் இதழ் பதிக்க வர வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டாள். அவளின் வேதனையான முகத்தை பார்த்துக் கொண்டே அவளின் நெற்றியோடு நெற்றி முட்டுவது போல போஸ் கொடுத்தான்.
தன்னை அவன் இதழ்கள் தீண்டும் என்று கண்களை மூடிக் கொண்டவளுக்கு அவனது முரட்டு இதழ்கள் அவளை தீண்டாமல் போக வியந்துப் போனாள்.
மாறாக அவனது நெற்றி அவளின் நெற்றியோடு முட்டிக் கொண்டு இருக்க என்னவோ நெஞ்சோரம் மெல்லிய சாரல் வீசியது அவளுக்கு.
“இத்தனை பேர் முன்னிலும் கிஸ் பண்ணி விடுவானோ” என்று பயந்துப் போனாள். ஆனால் அவன் அப்படி பண்ணாமல் போகவும் மனம் லேசாகியது.
அவர்கள் தான் நாகரீகம் இல்லாமல் கேட்கிறார்கள் என்றால் நாமும் அப்படியே நடந்துக் கொள்ளவேண்டுமா என்று அவளின் மனம் முரண்டியது. அதை படித்தானோ என்னவோ ராசசிங்கன் முத்தத்தை தவிர்த்து விட்டு நெற்றி முட்டாளோடு நிறுத்திக் கொண்டான்.
“சார் ப்ளீஸ்” என்று அவனை வற்புறுத்த,
“க்ராஸ் யுவர் லிமிட்” என்று எச்சரிக்கையாக சொல்லி விட்டு பெண்ணவளின் கையை பிடித்துக் கொண்டு அவளின் வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டான்.
பத்திரிகை நிரூபர்கள் அத்துமீறி செய்ய சொன்னதில் அவர்களை எச்சரித்த ராசசிங்கன் பெண்ணவளை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
அவனது எச்சரிக்கையில் ஒரளவு மனம் சமாதனம் ஆனது ஏந்திழையாளுக்கு. எங்கே அத்தனை பேரின் முன்னிலையிலும் தன்னை கிஸ் பண்ணி விடுவானோ என்று பயந்து தான் போனாள். ஆனால் அவன் செய்யாமல் போனது மனதுக்குள் பெரும் அமைதியை விளைவித்தது.
ஏந்திழையாளின் வீட்டு ஆட்கள் யாரும் ராசசிங்கனை கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. அதை பற்றி அவன் கொஞ்சமும் கண்டு கொள்ளவே இல்லை.
“மிஸ்டர் வேல் முருகன்” என்று அத்தனை பேரின் மத்தியிலும் அவரை பெயர் சொல்லி அழைத்தான் அவன். அதை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு அவ்வளவு கோவம் வந்தது. ஆனால் வேல்முருகனோ அதற்கு எல்லாம் அலட்டிக் கொள்ளவே இல்லை.
“சொல்லுங்க ராசசிங்கன்” என்று இவர் அவனை அழைத்துக் கொண்டு தனி அறைக்கு சென்று விட்டார்.
“கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவனா இருக்கிறான். இவனுக்கு போய் நம்ம வீட்டு பெண்ணை குடுக்கணுமோ... எங்க இருந்து இவனை பிடிச்சுட்டு வந்தாரு இந்த மாமா” என்று வீட்டு மருமகன்கள் புலம்பினார்கள்.
“ம்கும் அவன் சரியான வழில பிறந்து இருந்தா மரியாதை பண்பு எல்லாம் தெரிஞ்சு இருக்கும். இவனுக்கு தான் அவனுடைய பிறப்பு என்னன்னு கூட தெரியாதே.. பிறகு அவன் கிட்ட இதை எல்லாம் நாம எதிர் பார்க்கலாமா... அப்படி எதிர்பார்த்தா நாம தான் வடிகட்டுன முட்டாள்” என்று ராசசிங்கனின் பிறப்பை இழிவுப் படுத்தினார்கள்.
“பிறப்பை விட்டு தள்ளுங்க... இவன் வளர்ந்த விதம்...” என்று கண்ணன் எடுத்து குடுக்க,
அதை மற்றவர் பிடித்துக் கொண்டு “அதை சொல்லுங்க... தொழில்ல ஜெயிக்கணும்னா இவன் எத்தனை பெண்களை அவன் வலையில சிக்க வச்சி இருக்கான் தெரியுமா? அத்தனையும் குடும்பத்து பெண்கள். இவனோட சேவைக்கு மயங்கி அவங்களோட டீல் எல்லாத்தையும் இவனுக்கு இல்ல விட்டு குடுத்து இருக்காளுங்க” என்று பொறுமினார் இன்னொரு மாமா.
அதை எல்லாம் கேட்க கேட்க சுந்தரத்துக்கு தன் மகளின் மீது கட்டுக் கடங்காத ஆத்திரம் வந்தது. அதை அப்படியே பார்வையாலே அவளிடம் வெளிப்படுத்த அவள் அசையவே இல்லை. அப்படியே கல்லு போலவே நின்று இருந்தாள்.
சுந்தரம் மட்டும் இல்லை அங்கு இருந்த அத்தனை பேரும் ராசசிங்கனை பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சித்துக் கொண்டு இருக்க அதை எல்லாம் கேட்டவளுக்கு மனம் வெம்பிப் போனது. ஆனால் அதை வெளியே சிறிதும் கூட காட்டிக் கொள்ளாமல் இரும்பு மனிசியாய் நின்று இருந்தாள் ஏந்திழையாள்.





