“உங்க வீட்டுல இருக்கிற பெண்களை எங்க வீட்டு சொந்தங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பேசி முடிக்கலாம் ம்மா” என்று இரு பாட்டி மார்களிடமும் பெருமை பட்டுக் கொண்டார்கள் மணப்பெண்ணின் குடும்பத்தார்கள்.
திருமண உறுதி புடவை மணமக்கள் இருவரும் தேர்ந்தெடுக்க,
“நாம எல்லோரும் சங்கீத் நிகழ்ச்சிக்கு உடை எடுக்கலாம் வாங்க” என்று அழைத்து வர்ணம் சொல்ல அதற்கு ஏற்றார் போல அனைவரும் அவரவர்களுக்கு தோதான உடைகளை தேடி நகர்ந்தார்கள்.
ஆனால் ஏந்திழையாளை மட்டும் தங்களின் கைப்பிடியிலே வைத்துக் கொண்டார்கள் அன்னைமார்களும் அத்தைமார்களும். கூடவே அண்ணன்களும் மாமனுங்களும்.
டிசைனர் புடவை செக்ஷன் கீழ் தளம் என்பதால் ஏந்திழையாள் கீழே போகலாம் என்று சொல்ல,
அம்மாமார்கள் பட்டுப்புடவை செக்ஷனை பார்வையிட,
“சரி நீங்க இங்க எடுத்துட்டு இருங்க.. நான் கீழப் போய் பார்த்துட்டு வரேன்” என்று அவள் நகர,
“இல்லல்ல நாங்களும் வர்றோம். பிறகு இங்க வந்து பார்த்துக்கலாம்” என்று சொல்லி அனைவரும் லிப்ட்டில் ஏறிக்கொண்டார்கள். அண்ணனுங்களும் கூடவே வந்தார்கள்.
லிப்ட்டில் ஏறி கீழே வந்தார்கள் அனைவரும்.
“ஏந்திழை இந்த செக்ஷன் தானே ம்மா” என்று கேட்டுக் கொண்டே ஒவ்வொருவராய் லிப்ட்டை விட்டு இறங்கி முன்னாடி நடந்துப் போனார்கள். கூட ஒருத்தி வந்தாளே அவளிடம் பேசினார்களே தவிர அவள் பேசினாளா என்று கூட கவனிக்காமல் முன்னே போனார்கள் அனைவரும். இவள் இறுதியாக இருந்ததால் அவள் வர தாமதமாகும் என்று எண்ணிக்கொண்டே இவர்கள் முன்னாடிப் போக பின்னாடி இருந்தவள் வரவே இல்லை.
“எங்க இவளை காணோம்” என்று பின்னாடி திரும்பி பார்த்தார் அவளின் அன்னை. அவர் திரும்பவும் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே ராசசிங்கனின் கைப்பிடியில் இருந்தாள் ஏந்திழையாள். அதை பார்த்த அனைவருக்கும் உயிரே போனது போல இருந்தது. அவனது கையை தட்டி விட்டு அவள் வெளியே ஓடிவரப் பார்க்க இவர்களும் லிப்ட்டுக்குள் நுழையப் பார்க்க அதற்குள் லிப்ட் மூடிவிட்டது.
யுகேஷும் கார்த்தியும் வேகமாய் அடுத்த தளத்தின் பட்டனை அழுத்த மாடி படியில் ஏறி ஓடினார்கள். இவர்கள் ஓடிய வேகத்துக்கு லிப்ட்டும் வந்து சேரவும் சரியாக இருந்தது. ஆனால் அது நில்லாமல் கடந்துப் போக ஒரு சேர அருகில் இருந்த சுவரை குத்தி தங்களின் ஆற்றாமையை அடக்கிக் கொண்டு வேகமாய் அடுத்த தளத்துக்கு ஓடினார்கள்.
அங்கும் பட்டனை அழுத்தி விட்டு காத்திருக்க அங்கும் லிப்ட் கதவு ஓப்பனே ஆகவில்லை. அப்பொழுது தான் ராசசிங்கனின் திட்டமே புரிந்தது அவர்களுக்கு.
எத்தனை முறை மாடி ஏறி இறங்கி லிப்ட் பட்டனை அழுத்தினாலும் அது திறக்கப் போவது இல்லை என்று புரிந்துக் கொண்டவர்கள் இனி அவனாக லிப்ட்டை ஓப்பன் பண்ணினால் தான் தங்களின் தங்கையை காண இயலும் என்று புரிந்த உடன் வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.
கை முஷ்ட்டி இறுக இறுக தங்களின் கோவத்தை சுவரில் வெளிப்படுத்திக் கொண்டு பொறுமையற்று ராசசிங்கனுக்காக மனதில் மூண்ட கனலுடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள் இருவரும்.
தங்களின் கண் முன்னே தங்களின் தங்கையை தூக்கிய அவனது தினவை கண்டு அவ்வளவு ஆத்திரம் வந்தது. அவனை அப்படியே திருகிப் போக இருவரும் துடித்துக் கொண்டு இருந்தார்கள். அதற்குள் அன்னைமார்கள் இவர்களுக்கு போனை போட,
“ஒன்னும் இல்லம்மா இங்க தான் இருக்கா. நாங்க பார்த்துட்டு வர்றோம்” என்று சமாளித்தவர்களுக்கு ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை. தங்களின் கண் முன்னே தங்கையை அவன் சிறை பிடித்ததை சீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
தங்களின் தங்கை அவனிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடு படப் போகிறாளோ என்று வேதனைக் கொண்டார்கள்.
இங்க லிப்டுக்கு உள்ளே நின்று இருந்த ஏந்திழையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா அத்தையோடு அவளும் நகர பார்த்தாள். ஆனால் அவளால் இரண்டடிக்கு மேல நகரமுடியவில்லை. பின்னாடி திரும்பிப் பார்த்தாள்.
அங்கே அவளின் முந்தானை எதிலோ மாட்டிக் கொண்டு இருக்க, “ஒரு நிமிடம் ம்மா” சொல்லிக்கொண்டே இவள் முந்தானையை விடுவிக்கப் பார்த்தாள். அவள் பேசியது யாரின் காதிலும் விழவே இல்லை. புடவை சிக்கி இருந்ததோ ஒரு ஆடவனின் கையில் என்று புரிய வேகமாய் அவனை நெருங்கி நாகரீக இடைவெளி விட்டு,
“உங்க கையில என் புடவை சிக்கி இருக்கு... ப்ளீஸ் உங்க கையிலிருந்து புடவையை எடுத்து விடுங்க” என்று இவள் சொன்னாள். சொன்னாலும் அவனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் போக நிமிர்ந்துப் பார்த்தாள் அவனை.
பார்த்த உடன் அவளுக்கு அடையாளம் புலப்படவில்லை.
“ஹலோ சார்... ப்ளீஸ் ஹெல்ப்” என்று இவள் மேலும் சொல்ல அவனது விழிகள் லிப்ட்டை விட்டு அனைவரும் போகும் தருணத்துக்காக காத்துக் கொண்டு இருந்தது. அதனால் இவள் சொன்னதை எல்லாம் அவன் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை.
சரியாக இவளே புடவையை விடுவித்துக் கொண்ட தருணம் லிப்ட் கதவு மூட ஆரம்பிக்க வேகமாய் அதை தடுக்க விரைந்தாள். அதற்குள் அவளின் இடையை ஒற்றை கையால் அழுந்த பிடித்து தடுத்தவன் இன்னொரு கையால் தன் தாடி கண்ணாடி தொப்பி மூன்றையும் கழற்றி வீசினான். அவள் திகைத்துப் பார்க்க, வெளியே அவளது குடும்பமும் அவனை தான் திகைத்துப் பார்த்தது.
“அச்சோ என் பொண்ணு” என்று அத்தையும் அம்மாக்களும் சத்தம் போட்டு கதற, அண்ணன்கள் வேகமாய் லிப்ட்டுக்குள் புக பார்க்க கதவு சத்தமில்லாமல் இறுக்கமாக சாத்திக் கொண்டது. உடனடியாக மாடி ஏறி லிப்ட்டை பிடிக்கப் பார்க்க எதுவும் இயலாமல் போனது ராசசிங்கனின் தீரத்துக்கு முன்னால்.
மூடிய கதவை தட்டி தட்டி ஓய்ந்துப் போனாள் பெண்ணவள்.
“அண்ணா அண்ணா” என்று அவள் கதற அவளின் குரலை கேட்ட அனைவருக்கும் அடிநெஞ்சுவரை கலவரம் மூண்டது.
“எவ்வளவு நேரம் தட்டினாலும் நான் மனது வைக்காமல் இந்த லிப்ட் கதவு திறக்காது...” என்று அவளின் காதோரம் சிங்கன் சொல்ல விழிகளில் பயம் படர அவனை அதிர்ந்துப் போய் பார்த்தாள்.
அவளின் விழிகளில் படர்ந்து இருந்த அச்சத்தை பார்த்தவனுக்கு இதழ்களில் ஏளனம் வழிந்தது.
“என்னவோ உன்னை நெருங்கவே முடியாதபடிக்கு உன் நொண்ணனுங்களும் உன் மாமானுங்களும் ரொம்ப தான் ப்ரோடேக்ட் குடுத்துட்டு இருக்கானுங்க. அது தான் அவனுங்களுக்கு ஒரு சின்ன செம்பில் காட்டலாம்னு உன்னை தூக்கினேன்” என்றான் திமிராக.
அதிர்ந்துப் பார்த்தவள், “இதுக்காகவா?” என்று அவள் கேட்டாள்.
“பின்ன வேற எதுக்காக...” என்று நக்கலாக சொன்னவன், அவளின் இடையை வலிக்கப் பற்றி இருந்த இடம் கண்ணிப் போக பட்டென்று அவனது பிடியில் இருந்து வெளிவரப் பார்த்தாள். ஆனால் அவன் விடுதலை கொடுக்க வேண்டுமே...
“ப்ளீஸ் என்னை விடுங்க... நான் போகணும்” என்று கெஞ்சியவளின் கெஞ்சல்கள் எல்லாம் அவனது காதில் விழவே இல்லை.
“நான் உன்கிட்ட முன்னாடி ஒன்னு சொன்னனே நினைவு இருக்கா?” என்று அவன் அடிக்குரலில் கேட்க தூக்கிவாரிப் போட்டது இவளுக்கு.
அதை எப்படி அவளால் அவ்வளவு எளிதாக மறந்துப் போய் இருக்க முடியும்.. அவளின் காதோரம் முன் பின் தெரியாத பெண் என்று கூட இல்லாமல் அப்படியே கொச்சையாக பேசி வைத்து இருந்தானே... நினைக்கவே நெஞ்செல்லாம் கலங்கிப் போனது.





