வராளி தலையிலே அடித்துக் கொண்டாள். வீட்டின் முன்னாடி கார் சத்தம் கேட்கவும் கலாவும் சிவாவும் வெளியே வந்து பார்த்தார்கள். முன்னாடி அமைச்சர் என்று பெயர்பலகை இருக்கக் கண்டு கண்களை விரித்தார்கள்.
மறுபடியும் ஒரு அமவுண்ட் தேறும் போலையே... என்று பேராசையில் மிதந்தனர். “உங்க கருணைக்கு ரொம்ப நன்றி.. ஆனா இதோட நம்ம உறவு முடிஞ்சுக்கிட்டா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்” என்று சொன்னவள் பிள்ளையை தன் முந்தானையால் போத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.
நுழைந்தவளிடம் வந்தும் வராததுமாக “உன் வீட்டுகாரர் தானே..” என்று கேள்வி கேட்டாள் அக்கா.
“எதுக்காக உன்னை கொண்டு வந்து விட்டுட்டு போறாரு...? மறுபடியும் உறவை தொடர போறாராமா?” கலா ஆசையில் கேட்டார்.
இவர்களின் பேச்சை கேட்டு தலைவலி வந்தது. “அதெல்லாம் ஒன்னும் இல்லை.. பாட்டி லிப்ட் கேட்டாங்க. அதனால வர வேண்டியதா போயிடுச்சு” என்றவள் பிள்ளையை படுக்கையில் படுக்க வைத்து விட்டு குளித்து வந்து அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள்.
குழந்தைக்கு இன்னும் திட உணவுகள் எதையும் பழக்கவில்லை. பொறுமையாக பழக்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டாள்.
அதனால் அவளுக்கு மட்டும் உணவு சமைத்து உண்டு விட்டு அதற்கு பிறகே அடுத்தடுத்த வேலைகளை செய்தாள். ஒரு வாரம் சேர்த்து வைத்து இருந்த உடைகளை அள்ளி வாஷிங் மிஷினில் போட்டுவிட்டு குழந்தையின் உடைகளை மட்டும் அன்றாடம் துவைத்து போட்டுவிடுவாள். அதே போல இன்றைக்கும் செய்தாள்.
குழந்தை தனியாக இருக்கவும் கத்தினான். ஆனால் அவளால் என்ன செய்ய இயலும். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வந்து பிள்ளையை கொஞ்சி விட்டு போய் வேலையை பார்த்தாள்.
பாட்டியின் வேலை வீட்டுக்கு வருவதோடு முடிந்துப் போவதால் பெரும்பாலும் அவரின் வீட்டுக்கு போய் விடுவார். சில நேரம் மட்டுமே அவளுக்கு உதவியாக வீட்டிலும் இருப்பார்.
வீட்டுக்குள்ளயும் வெளியேவும் அல்லாடிக் கொண்டு இருந்தவளை பார்த்து கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை தாயும் தமக்கையும். அண்ணன் அவன் இருந்தாலும் ஒன்று தான். இல்லை என்றாலும் ஒன்று தான். குழந்தையை பார்க்க ஆளில்லை.
பெருமூச்சு விட்டு தன்னை தேற்றிக் கொண்டவள் குழந்தையை நன்றாக பார்த்துக் கொண்டாள். அவளின் நெஞ்சு சூட்டில் தான் பிள்ளை தூங்குவான். படுக்க வைக்கும் முன்பு கொஞ்ச நேரமாவது அவளின் நெஞ்சில் அவன் இருக்க வேண்டும். இல்லை என்றால் தூங்கவே மாட்டான்.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்து அப்பாடா என்று படுக்கையில் விழ கூடத்தில் விளக்கை போட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தார் கலா. தூக்கத்துக்கு விழிகள் கெஞ்சியது. ஆனால் கண்ணை கூசும் வெளிச்சத்தில் கதை கிழிக்கும் சத்தத்தில் எங்கிருந்து தூங்குவது.
ஆனால் பிள்ளையை எப்படியோ நெஞ்சிலே போட்டு தாலாட்டி தூங்க வைத்து விட்டாள். இவளுக்கு தான் தூக்கம் இல்லாமல் போனது. பன்னிரண்டு மணிக்கு மேல் தான் கூடத்தில் சத்தம் ஓய்ந்தது.
அதன் பிறகே தூங்கினாள் வராளி. ஒவ்வொரு நாளும் பெரிய போராட்டம் தான் அவளுக்கு. இதில் புதிதாய் கணவன் என்கிற பெயரில் இன்னொருவன்... மலைத்துப் போனாள். சிறுவயதில் அவளும் எவ்வளவு தான் தாங்குவது. ஆனால் தாங்கி தான் ஆகணும்.. இதை விட இன்னும் அதிகம் இருக்கிறது அவள் பார்க்க வேண்டியது என காலம் அவளை பார்த்து சிரித்தது.
குறைந்த நேரத்தில் நன்றாக தூங்கி எழுந்தவள் அடுத்த நாலா காலையில் தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள். அந்த நேரம் ஒரு கார் வந்து வேகமாய் அவளின் வீட்டு வாசலில் நின்றது. குறுங்கண் ஓரம் எட்டிப் பார்த்தாள். தேனாண்டாள் காரை விட்டு இறங்குவது தெரிய வேகமாய் தன் பிள்ளையை நெஞ்சோடு அணைத்தவளின் கண்கள் கலங்கியது சடுதியில்.
“கடவுளே இந்த அரக்கியின் கண்களில் என் மகன் படவேக் கூடாது” என்று எண்ணியவள், வேக வேகமாய் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு பின் வாசல் வழியாக பக்கத்து வீட்டில் இருக்கும் பாட்டியிடம் கொண்டு போய் கொடுத்தவள்,
“பாட்டி என் மகனோட உயிர் இப்போ உங்க கையில தான் இருக்கு. என்ன ஏதுன்னு கேட்காதீங்க... என்னால சொல்ல முடியாது. நானா வந்து பிள்ளையை கேட்கும் வரை இவன் உங்கக்கிட்டையே இருக்கட்டும்.. ப்ளீஸ் பாட்டி பிள்ளையை வெளியே தூக்கிட்டு வராதீங்க” என்று கோரிக்கை வைத்தவள் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு போன மாதிரியே பின் வாசல் வழியாக உள்ளே வந்து வேலைக்கு கிளம்புவது போல யாரையும் சட்டை செய்யாமல் கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
ஆனால் உள்ளமெங்கும் பயத்தில் சூழ்ந்து இருந்தது. எந்த நேரம் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று திக்கு திக்குன்னு இருந்தது. ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல தலையை சீவிக் கொண்டு இருந்தாள்.
அவளின் விழிகளில் ஒரு யுகத்துக்கே உண்டான அச்சம் நிரவிக் கிடந்தது. “நம்ம வாசல்ல யாரு காரை நிறுத்தி இருக்கிறது?” கலா அறையிலிருந்து அப்போது தான் வெளியே வந்து வாசலை எட்டி பார்த்தார். அங்கே காரில் இருந்து இறங்கிய தேனாண்டாள் ராஜ தோரணையில் சுற்றிலும் யார் யார் கவனிக்கிறார்கள் என்பதை நோட்டம் விட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தார்.
“இந்த பொம்பளை இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கு... அடியேய் சிவா” என்று இவர் உள்நோக்கி குரல் கொடுக்க, “உன் பின்னாடி தான் ம்மா நிக்கிறேன். கத்தாத” என்று சொன்னவள்,
“என்ன காரணமா இருக்கும் ம்மா?” தாயிடம் கேட்டள் அவள். “எனக்கு மட்டும் என்னடி தெரியும்.. ஆனா இந்த பொம்பளை வந்தா நமக்கு லாபம் தானே...” என்று இரகசியமாய் சொன்னார். “அது வேணா உண்மை தான். எதுக்காக வந்து இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி கரந்துக்கலாம்” என்றாள்.
அவர்களின் பேச்சை கேட்ட வராளிக்கு உள்ளுக்குள் இதயம் சுக்கு நூறாய் உடைந்துப் போனது. “சுயநல பேய்கள்.. கூடிய சீக்கிரம் இங்கிருந்து போனா தான் என் பிள்ளையை காப்பாற்ற முடியும்” என்று எண்ணியவள் கை பாட்டுக்க அதன் வேலையை செய்தது. ஆனால் உள்ளம் முழுவதும் எரிச்சலாய் எரிந்தது.
“ஆமா நாமலே வாயை விட வேண்டாம்” என்று சொன்னவர், “வாடி உள்ளே போய் உட்கார்ந்துக்கலாம்.. இயல்பா இருக்குற மாதிரி காட்டிக்கலாம்” என்று வாசலில் இருந்து வேகமாய் உள்ளே வந்து கூடத்தில் அமர்ந்துக் கொண்டார். அவரின் பார்வை வராளியிடம் இருந்தது. அவரின் பார்வையை அவள் கொஞ்சமும் கண்டுக் கொள்ளவில்லை.
அந்த நேரம் வேகமாய் உள்ள வந்த தேனாண்டாள் வந்த உடனே, அங்கு இருந்த நாற்காலியை காலால் எட்டி உதைத்து தன் ஆத்திரத்தின் அளவை காட்டினார். “ஏய் பிச்சைக்காரி” என்று கலாவை கண்களை உருட்டி சொடக்கிட்டு அழைக்க கலாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“என்ன பிச்சைக்காரியா...?” முன்னாடின்னா கூட ஒத்துக்கிட்டு இருந்து இருப்பார். இப்போ அப்படி இல்லையே... லட்சாதிபதி ஆயிற்றே அவர்.
சுருக்கென்று ஏறியது. ஆனால் தேனாண்டாளிடம் அதை காட்டி விட முடியாதே... அவர் போட்ட பிச்சியில் தானே இவர் லட்சாதிபதி ஆகியது. அதனால் தன் எதிர்ப்பை காட்டவில்லை கலா.





