Notifications
Clear all

அத்தியாயம் 16

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1018
Topic starter  

“முதல்ல அதை செய்யிங்க.. அதுவரை என்னால இந்த வீட்டுல இருக்க முடியாது. அவளும் அவ தரித்திர மூஞ்சியும்.. நல்லா செவேன் ஸ்டார் டென் ஸ்டார் ஹோட்டலா பார்த்து புக் பண்ணுங்க. ஒரு வாரம் அங்க தான் தங்குவேன்” என்று கை பையை மட்டும் எடுத்துக் கொண்டு காரில் கிளம்பி விட அவரை தொடர்ந்து மற்ற அனைவரும் வீட்டை காலிபண்ணி விட்டு கிளம்பி விட்டார்கள்.

தேனாண்டாள் தெருமுனை தாண்டும் பொழுதே அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சேர்த்து ராயல் அறைகள் புக் பண்ணப்பட்டு இருந்தது. தன் மேக்கப்பை ஒருமுறை கை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டார். அவர் அதிகம் பயன்படுத்தும் பொருளும் அது தான். அதனாலே அதை தங்கத்தில் செய்து கொடுத்து இருந்தார் சிவசங்கரன்.

மனைவியின் அழகில் அடிமையோ அடிமை. அவரை தாண்டி தப்பு தண்டா எதுவும் செய்ய முடியாது. எல்லோரையும் அடக்கி ஆளும் வல்லமை கொண்டவர். ஊருக்கே எம்பியா இருந்தாலும் வீட்டில் எம்பி என்னவோ தேனாண்டாள் தான்.

அதை உடைத்து போடவே வந்து இருந்தாளோ இந்த வராளி. அவளை எண்ணி எண்ணி தன் கோவத்தை அவள் மீது வன்மமாக வளர்த்துக் கொண்டார்.

“வந்த உடனே என்னை வீட்டை விட்டு வெளியே துரத்திட்டல்ல... இனி நீ எப்படி இந்த ஊர்ல வாழ்ந்திடுவன்னு நான் பார்க்கிறேன்டி” என்று கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் அவளின் மீது ஆத்திரத்தையும் கோவத்தையும் வளர்த்துக் கொண்டார்.

இந்த பெண்ணை தேடி எடுத்தது இவர். இவர் தலைமையில் தான் திருமணமும் நடந்தது. இவரே தான் ஒரு வாரம் அவளை வீட்டில் வச்சு அனுப்பனும் என்று முடிவெடுத்தார். இவரே தான் அவள் இருக்கும் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்னு ஹோட்டலுக்கு கிளம்பினார். இதில் எங்கிருந்து வராளி முடிவெடுத்து எந்த செயலை செய்தாள். அவள் வாய் பேசாது அவரின் மகன் கட்டிய தாலியை வாங்கிக் கொண்டது மட்டும் தான். அதுக்கு தான் இவ்வளவு கோவமும் ஆத்திரமும் போல..

தங்களின் வசதிக்கு ஈடு இணை இல்லாமல் எங்கயோ குப்பையின் ஓரத்தில் மூலை முடுக்கில் கிடந்தவளுக்கு இந்த வாழ்க்கையா என்று மனம் வெந்துப் போனார்.

அவர் கொலோச்சும் மாளிகையில் தரித்திரம் பிடித்த பீடையா? என்று கருவினார். அவரின் மொத்த கோவத்துக்கும் காரணமானவளோ மன்னவனின் பார்வையில் தடுமாறிக் கொண்டு இருந்தாள். வீட்டில் ஒருவரும் இல்லை என்பதை பிஏவின் மூலம் உணர்ந்துக் கொண்டவனுக்கு ஏனோ உல்லாச மனநிலை வந்தது.

வீட்டில் இருந்த அத்தனை வேலையாட்களுக்கும் விடுமுறை கொடுத்தான் சடுதியில். “ஐயா” என்று அவர்கள் கண்களை விரித்தார்கள். ஏனெனில் உடம்பு சரியில்லை என்றால் கூட அவர்களின் இடத்தில் மாற்று ஆளை பணித்து விட்டு தான் கிளம்ப முடியும். விடுமுறை எல்லாம் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது அந்த வீட்டில்.

அப்படி இருக்கும் பொழுது தானாகவே விடுமுறை என்றால் அவர்களும் வியக்காமல் என்ன செய்வார்கள்.

“நான் தான் சொல்றேன். எல்லோரும் கிளம்புங்க” என்றவன் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு வீட்டில் இருந்த அத்தனை கேமராவையும் செயலிழக்க செய்தவன் தன் மனைவியை தேடி மேலே வந்தான்.

அவளின்னும் அவனது சட்டையில் தான் இருந்தாள். அந்த சட்டை அவளுக்கு மிகவும் பெரிதாக இருந்தது. கீழே குனிந்தால் அவளின் வனப்புகள் எல்லாம் தெரியும் அளவுக்கு அவ்வளவு பெருசாக இருந்தது.

கணவனின் திருட்டு கண்கள் தன்னை மேய்வதை உணர்ந்தும் அவளால் ஒன்றும் செய்ய இயலாமல் தவிப்புடன் தலையை குனிந்து இருந்தாள்.

“கீழே போகலாம்” என்றான். “அச்சோ வேணாம்” என்று பதறிப்போனாள். அவளுக்கு இவனை தவிர மற்ற அனைவரையும் பார்த்து ரொம்ப பயமா இருந்தது. அனைவரும் கண்களாலே அவளை வெட்டி வீசிக் கொண்டு இருந்தார்கள். எரித்துக் கொண்டு இருந்தார்கள்.

என்னவோ வழி தவறிய சின்ன ஆட்டுக் குட்டி இரத்தத்தை விரும்பி குடிக்கும் காட்டு ஓநாய்களிடம் சிக்கிக்கொண்டதை போல உணர்ந்தாள். அதனாலே அவள் வெளியே வர பயந்தாள். “ம்ஹும்... எனக்கு வேணும். வா” என்று சொன்னவன் அவளை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வந்தான். வீடே காலியாக இருந்தது.

அவள் அதிர்ந்து போய் உதயாதிபனை பார்த்தாள். “ம்ம்ம்... சின்ன சர்ப்பரைஸ்” என்று கண் சிமிட்டியவன் அவளை அடுப்படிக்கு அழைத்து சென்றான். அவளுடைய பயம் அவனுக்கு நன்றாக புரிந்தது. வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்பவில்லை என்றால் இந்நேரத்துக்கு அவன் வீட்டை விட்டு கிளம்பி வராளியை அழைத்துக் கொண்டு ஹெஸ்ட் ஹவுஸோ இல்லை பண்ணை வீட்டுக்கோ சென்று இருப்பான். அவர்கள் முந்திக் கொள்ளவும் இவன் இயல்பாக அவளோடு வீட்டில் வளைய வந்தான்.

“என்ன சாப்பிடுற?” என்று கேட்டான் உதயாதிபன். “நீங்க சமைப்பீங்களா?” கண்ணை விரித்தாள் வியப்பில்.

“ம்ம்ம்... கேட்ரிங் முடிச்சு இருக்கேன்” என்றவன் எதை எதையோ செய்தான். “மாவு பிசைய தெரியுமா?” கேட்டான். “ம்ம்ம்” என்றாள்.

“அப்போ இந்தா பிசை” என்று அவளிடம் மாவை கொடுத்து விட்டு இவன் காய்கறி நறுக்க தொடங்கி விட்டான். இவளும் மாவை பிசைய, “எதாவது பேசுடி” என்றான்.

“ஹாங்... என்ன பேசுறது... நீங்க பேசுங்க நான் கேக்கிறேன்” என்றாள். “ஹப்பா ரொம்ப நீளமா பேசிட்டடி” என்று சிரித்தான். அவனது சிரிப்பை விழியலகாது பார்த்தாள்.

“நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க” என்றாள். “ம்ம்ம்.. கமெண்ட்ஸ் எல்லாம் பாஸ் பண்ணுவியோ?”

“காலேஜ் போறேன்ல அத கூட செய்யலன்னா எப்படி?” என்று தன் கூட்டை விட்டுட்டு மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள். உதயாதிபன் பேச வைத்தானோ... அவள் மாவு பிசைந்துக்கொண்டே அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“ம்ம்” என்று மட்டுமே அவளிடம் இருந்து சத்தம் வந்தது. சில நேரம் இதழ் பிரியாமல் சிரித்தாள். “பன்னீர் பட்டர் மசாலா ரெடி..” என்றவன் அவளுக்கு பன்னீர் துண்டுகளோடு டேஸ்ட் பார்க்க கொடுத்தான். அவனே அவளது வாயில் வைத்து விட்டான்.

“செம்மையா இருக்கு... ஹோட்டல் டேஸ்ட்” என்றாள். “ம்ம்” என்றவன் “மாவு ரெடியா?” கேட்டான். “இல்லங்க இன்னும் பிசைய வேண்டியது இருக்கு” “சரி இரு நானும் வாரேன்” என்றவன் செப் கோட்டை கழட்டிவிட்டு வெற்று மார்புடன் அவளின் பின்னோடு வந்து நின்றவன் அவளின் கையின் மீது தன் கையை வைத்து பிசைய ஆரம்பித்தான்.

அதை எதிர்பார்க்கதவள் திகைத்துப் போனாள். “இல்ல நான் கையை எடுத்துக்குறனே” என்று தவிக்க, “அதெல்லாம் வேண்டாம்.. நான் எப்படி மாவு பிசையிறதுன்னு சொல்லி தரேன்..” என்றவன் அவளுக்கு மாவு எப்படி பிசைந்தால் மிருதுவாக வரும் என்று ட்ரிக் சொல்லிக் கொடுத்தான். ஆனால் அவனது மீசையின் குறுகுறுப்பு அவளின் பின்னங்கழுத்தில் பட்டு அவளை மிகவும் அவஸ்த்தை செய்துக்கொண்டே இருந்தது. போதாதற்கு அவனது ஆண் வாசம் அவளை கிறங்கடிக்க என்னடா இது என்று ஆனது.

அவனின் திடமான கைகள் அவளின் கைகளோடு உரசி உரசி புது ராகம் மீட்ட “கடவுளே...” கண்களை அழுந்த மூடிக் கொண்டாள். “நல்ல கவனி.. இது தான் மாவோட பதம்” என்று அவனது உதடுகள் அவளின் காதோரம் உரசி அவளின் உயிரை எடுக்க கண்களை மூடிக் கொண்டாள் ஆணவன் கொடுக்கும் புதுவிதமான தொடுகையில்.

அவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக அவளை குனிந்து பார்த்தான். அவள் கண்களை மூடி மயக்கத்தில் இருப்பவள் போல இருக்க உதயாதிபனின் இதழ்களில் மெல்லிய மலர்வு தென்பட்டது.

Loading spinner

This topic was modified 8 hours ago by Admin

   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top