பின் அவளை சற்று தள்ளி நின்று பார்த்து இரசித்தவன் வேலை இருக்க தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டான். அவனும் அன்று மிக சீக்கிரமாக எழுந்து இருந்ததால் அவனுக்கும் தூக்கம் சொக்கியது. கட்டுப் படுத்த பார்த்தும் முடியாமல் கண்கள் இரண்டும் எரிய ஆரம்பிக்க அவனும் அவளுக்கு அருகில் வந்து படுத்துக் கொண்டான்.
அவன் படுத்த சில நிமிடங்களிலே அவள் உருண்டு வந்து அவன் மீது படுத்துக் கொண்டாள். என்னடா திடிரென்று பாரமா இருக்கிறதே என்று கண்களை திறந்தவன் தன் மீது கையையும் காலையும் போட்டுக்கொண்டு தூங்கும் பெண்ணவளை கண்டு குறும்பு புன்னகை பூத்தவன் தானும் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
இருவரும் ஆழ்ந்து தூங்கிப் போனார்கள். மத்திய உணவு வேளை கூட தாண்டிப் போனது. அவனுக்கு போன் போட்டு பார்த்த குடும்பத்தவர்கள் அவன் எடுக்காமல் போனதில் அவனது அறையில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினார்கள் வேறு வழியில்லாது. அதற்கும் ஒரு ரியாக்ஷனும் இல்லை அவர்களிடம்.
“ஒரு வேலை பகல்லயே ஆரம்பிச்சிட்டானோ.. ஏன் சொல்றேன்னா இவ்வளவு நாள் காஞ்சி கிடந்தான் இல்லையா?” என்று சீதா சொல்ல அதை கேட்ட லட்சுமி,
“இருக்குமிருக்கும்... சின்ன பொண்ணு வேற... அவ வேற ரொம்ப அழகா இருக்கா... பின்ன பாயாம இருப்பானா..” என்று பெரியவள் ஒத்து ஊத, அதை கேட்ட தேனாண்டாளுக்கு ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது.
“ஏய் சும்மா இருங்கடி... வாய்க்கு வந்ததை உலராம.. ஏற்கனவே நான் கொதிச்சு போய் இருக்கேன். இதுல இவளுங்க வேற ஏத்தி விட்டுட்டு இருக்காளுங்க” என்று அதட்டியவர் விடாமல் காலிங்பெல்லை அழுத்திக்கொண்டே இருந்தார். சாற்றிய கதவு கொஞ்சம் கூட திறக்கவே இல்லை. அதில் மேலும் எரிச்சல் ஆனவர் கடுப்பாகி கீழே போய் விட்டார்.
“என்ன ஆண்டாளு ஏன் இவ்வளவு கோவமா இருக்க?” அவரின் கணவன் சிவசங்கரன் கேள்விகேட்டார். “எல்லாம் உங்க உத்தம புத்திரனால தான். காலையில அந்த பீடையை அறைக்குள்ள கூட்டிட்டு போனான். இந்நேரம் வரைக்கும் வெளில வரல” என்றார் கோவமாக.
“நீ கதவை தட்ட வேண்டியது தானே” என்றார். “எரிச்சலை கிளப்பாதீங்க சொல்லிட்டேன்” என்று எரிந்து விழுந்தார்.
“நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி கோவப்படுற ஆண்டாளு?” “அப்பா நீங்க வேற, போன் பண்ணி பார்த்தாச்சு, காலிங்பெல்லும் ஒன்றுக்கு நூறுமுறை அடிச்சு பார்த்தாச்சு. ம்கும் அவன் கதவையே திறக்க மாட்டிக்கிறான்” என்று லட்சுமி சொன்னாள் கடுப்பாக.
“ம்ஹும் என்னத்தை காட்டி மயக்கினாளோ இவனும் இது தான் சாக்குன்னு அவ முந்தானையில சுருண்டுக்கிட்டான் போல” என்ற நேரம் அந்த வீட்டின் இரண்டு மாப்பிள்ளைகளும் உள்ளே நுழைந்தார்கள்.
“அப்போ மச்சானை இனி நம்ம கைப்பிடியில வைக்க முடியாதா?” என்று லட்சுமியின் கணவன் கேட்டான்.
“அட கையில பிடிக்கிறதா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை... மச்சான் ரொம்ப வெறியா இருப்பாரு போலையே” சீதாவின் கணவன் அவன் பங்குக்கு பேச, அதை எல்லாம் உள்ளே அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த கலிவாரதனுக்கு முகம் சுழித்தது.
“ச்சீ மனுசங்காலா இவங்கல்லாம்” என்று எரிச்சல் பட்டவர் கட்சி தலைமை இடத்துக்கு செல்ல கிளம்பினார். இங்கே எல்லோரையும் கோவத்திலும் எரிச்சலிலும் இருக்க வைத்த இணையோ ஆனந்த சயனத்தில் தங்களை மீறி இருந்தார்கள்.
முதலில் முழித்தது என்னவோ வராளி தான். கண் விழித்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்றே ஒன்றும் புரியவில்லை. நிதானத்துக்கு வரவே நீண்ட நேரம் பிடித்தது.
அவளை சுற்றி இருந்த ஆடம்பர பொருட்கள் திரை சீலைகள் என எல்லாவற்றையும் கண்டு கனவு கண்டு இருக்கிறோம் போல என்றே எண்ணினாள். அப்பொழுது தான் எதையோ கட்டி பிடித்து இருக்கிறோம் என்று உணர்ந்தவள் என்ன என்று பார்க்க ஒரு ஆடவனின் வெற்று தேகம் இருக்கக் கண்டு அலறி விட்டாள். அவளின் சத்தத்தில் கண்களை திறந்தவன்,
“பயந்துட்டியா?” என்று கேட்டவன் அவளை இழுத்து மீண்டும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர, “சார்.. சார்...” என்று அவனை உசுப்பிய பொழுது தான் இன்று காலையில் நடந்த சம்பவம் எல்லாம் நினைவுக்கு வந்தது. அதிர்ந்து தன்னை அணைத்து இருப்பவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரும் இருந்த நிலையை கண்டு விக்கித்துப் போனாள். அவனது வெற்று மார்பில் இதுவரை சாய்ந்து இருந்த நினைவு வந்து அவளை முகம் சிவக்க வைக்க அவனை எப்படி எதிர்நோக்குவது என்று தெரியாமல் தலையை குனிந்துக் கொண்டாள். பெரும் பதட்டம் அவளை சூழ்ந்தது. அவளுக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை.
அவனை விட்டு விலக வேண்டுமா? இல்லை அவனோடு ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டுமா? கோவத்தில் கத்துவானா? என்றெல்லாம் அவளின் மனம் யோசிக்க, அவளின் இடையில் இருந்த தன் கையை எடுத்துக் கொண்டவன் அவளை இழுத்து தன் அருகில் படுக்க வைத்து, “ரிலாக்ஸ்டா இரு...” என்று அவளின் பதட்டத்தை பார்த்து சொன்னவன்,
“பிரெஷ் ஆகிட்டு வா சாப்பாடு வரவக்கிறேன்” என்றவன் இன்னொரு குளியல் அறையில் நுழைந்துக் கொண்டான். அவனது பேச்சுக்கு தலையை ஆட்டியவள் முகம் கழுவிவிட்டு வெளியே வந்தாள். உதயாதிபனும் வந்து இருந்தான். உணவு பொருள்கள் மேலே மாடிக்கு போவதை பார்த்த குடும்பத்தார்கள் அனைவருக்கும் இன்னும் கடுப்பு ஏறியது.
“பார்த்தியா க்கா” என்று சீதா மூட்டி விட, “நானும் பார்த்துக்கிட்டு தானேடி இருக்கேன்...” என்று கண்களாலே அனல் மூச்சு விட்டாள் லட்சுமி. தேனாண்டாளுக்கு சொல்லவே தேவையில்லை. வயிறும் நெஞ்சும் கபகபவென்று எரிந்தது.
“இந்த வீட்டுல என்ன தான் நடக்குது. இங்க பெரிய மனுசி நானு. ஆனா இங்க என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல... இன்னைக்கு வந்த அந்த பஞ்சப்பரதேசிக்கு உபசரணை ரொம்ப நல்லா பலமா இருக்கு.. அத நான் கையை கட்டி பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று காந்தினார்.
“ஆண்டாளு” என்று சிவசங்கரன் அவரை அமைதி படுத்த பார்க்க, அவரின் கையை தட்டி விட்டவர், “என்னய்யா சொல்ல போற.. எல்லாம் உன்னால தான் நீ தானே இந்த பஞ்ச பரதேசியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த.. நீ மட்டும் சாதகம் பார்க்காம போய் இருந்து இருந்தா இந்த நிலை வந்து இருக்குமா... எங்கயோ சாக்கடையில கிடந்தவ நடு வீட்டுல வந்து உட்கார்ந்து இருக்கா.. அதை நான் கையை கட்டி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன்... வேடிக்கை பார்க்க வச்சு இருக்கைய்யா” என்று ஆங்காரமாய் கத்தினார் ஆண்டாளு.
“இன்னும் ரெண்டு நாள் தான் ஆண்டாளு.. உன் பிள்ளைக்கு ஊட்டில குளிர்கால கூட்டத்தொடர் அழைப்பு வந்து இருக்கு. அவன் கண்டிப்பா போயே ஆகணும். அதுக்கு பிறகு இந்த பீடையை ஒழிச்சு கட்டிடலாம்” என்றார் தன்மையாக.
“முதல்ல அதை செய்யிங்க.. அதுவரை என்னால இந்த வீட்டுல இருக்க முடியாது. அவளும் அவ தரித்திர மூஞ்சியும்.. நல்லா செவேன் ஸ்டார் டென் ஸ்டார் ஹோட்டலா பார்த்து புக் பண்ணுங்க. ஒரு வாரம் அங்க தான் தங்குவேன்” என்று கை பையை மட்டும் எடுத்துக் கொண்டு காரில் கிளம்பி விட அவரை தொடர்ந்து மற்ற அனைவரும் வீட்டை காலிபண்ணி விட்டு கிளம்பி விட்டார்கள்.





