Notifications
Clear all

அத்தியாயம் 1

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

“என்ன மா ரெடியா... எல்லாம் ஓகே தானே..” என்று கேமரா மேன் கேட்டார். “ஓகே சார்...” என்று கையை காட்டியவள் அவர் சொல்லி குடுத்தபடி புடவை முந்தானையை அழகாக விசிறி புடவையின் சரிகையும் வேலைப்பாடும் தெரிவது போல கேமராவுக்கு காண்பித்த படியே அந்த ஷோரூமை சுற்றி வந்தாள் வராளி. அப்படி சுற்றி வரும் பொழுது அவளின் கால் ஒரு இடத்தில் இடறிவிட,

“ஷிட்.. நல்ல ப்ளோல போயிட்டு இருந்தது... என்னம்மா இப்படி பண்ற... பார்த்து ஒழுங்கா நடக்க தெரியாதா..? நல்ல சீனை சொதப்பிட்டியே..” என்று திட்டியவர் மீண்டும் அந்த சீனை எடுத்தார் கேமராமென்..

கிட்டத்தட்ட மத்தியம் வரையும் அதே சீனை எடுத்துக் கொண்டு இருந்தார். “இது தான் லாஸ்ட்... இனி ஒரு தடங்கல் வரக்கூடாது சொல்லிட்டேன்” என்று கடுமையாக சொன்னவர் கேமராவின் வழியே வராளி நடந்து போவதை பின் புறமிருந்து சூட் செய்தார்... அவள் நடக்க நடக்க அவள் கட்டி இருந்த புடவையின் முந்தானை கீழே புரண்டு அழகாக விரிந்து இருக்க அதை கீழே இருந்து மேலே வந்தபடி கேமரா நகர்ந்தது.

அப்படியே அவளின் பக்கவாட்டுக்கு வந்து முன்புறமாக அவளை படம் பிடிக்க, “ஷிட்” என்று ஒரே ஒரு கத்து தான். அப்போது தான் வராளி கீழே குனிந்து பார்த்தாள். அவளின் மார்பு பகுதியில் ஈரமாக இருந்தது.

“எப்படியாப்பட்ட சீன்... இப்படி நாசம் பண்ணிட்டியே... உன்னை எல்லாம் ஆட் ஷூட்டிங் வர சொல்லி யாரு அழுதா? ஒழுங்கா வீட்டுல புள்ளையை கவனிச்சுக்கிட்டு இருக்க வேண்டியது தானே... ஏனிங்க வந்து என் கழுத்தை அறுக்குற” என்று எரிந்து விழுந்தவர்,

ஷோரூம் ஆட்களை பார்த்து சத்தம் போட்டார். “உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? போயும் போயும் அம்மாவா இருக்குற ஒருத்தியை கூட்டுட்டு வந்து ஏன் என் உயிரை எடுக்குறீங்க?” என்று கத்தியவர்,

“இந்த பொண்ணை வச்சு தான் சூட்டிங் பண்ணனும்னா நீங்க வேற ஒரு கேமராமேனை பார்த்துக்கோங்க... என்னால முடியாது...” என்று சொன்னவர் தன் யூனிட் ஆட்களை பார்த்து “பேக்கிங்” என்று கத்தி விட்டு வெளியே போய் விட்டார்.

அந்த கடையின் உரிமையாளர் மேனேஜரை சத்தம் போட, மேனேஜரோ காண்ட்ராக்ட் பேசியவரை திட்ட கண்கள் கலங்கியது வராளிக்கு...

“சாரி சார்” என்று சொல்லி விட்டு உடை மாற்றும் அறைக்கு சென்று பளபளக்கும் பட்டுப் புடவையை அவிழ்த்து விட்டு அவள் வரும் பொழுது கட்டிட்டு வந்த நூல் புடவையை உடுத்திக் கொண்டாள். கண்களில் விரக்தி தெரிந்தது.

அந்த நேரம் அந்த அறையின் கதவை தட்டி வயதான பாட்டி ஒருவர் உள்ளே வந்தார். அவரின் கையில் ஆறு மாத பிள்ளை அழுதுக் கொண்டு இருந்தது.

வேகமாய் அந்த பிள்ளையை வாங்கிக் கொண்டவள் சுவர் பக்கம் திரும்பி தன் பிள்ளையின் பசியை ஆற்றினாள். கொஞ்ச நேரம்கூட ஆகி இருக்காது... அதற்குள் தூங்கி இருந்தான் பிள்ளை.

அவனது காலை சுண்டி விட்டு அவனது பசியை போக்க பார்க்க அவன் சாமார்த்தியமாக கண்ணை விழிக்கவே இல்லை. சரி தூக்கத்திலேயாவது பசியாருவான் என்று பார்க்க அப்பொழுதும் அவன் பசியாறாமல் போக கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது அவளுக்கு.

“என்னம்மா ஆச்சு..? சூட்டிங் கேன்சல் ஆயிடுச்சாமே?” என்று வேலம்மாள் பாட்டி கேட்டார். அவரின் குரலில் ஏகத்துக்கும் வருத்தம் தெரிந்தது.

“ஆமாம் பாட்டி... இவன் சரியா பசியாறாம போனதுல புடவை நனைஞ்சி போச்சு..” என்று வேதனையுடன் சொன்னாள்.

“இவனுக்கு இதே தான் வேலை... நைட்டு முழுசும் வயிறு முட்ட குடிக்கிறது.. பகல் பொழுது ஆனா விரதம் இருக்குறது... அப்புறம் ராத்திரிக்கு பத்தாம நீ பூண்டு கருவாடுன்னு சாப்பிட்டு காலையில ஊற வேண்டியது.. பிறகு இப்படி புடவை நனையாம இருக்குமா.. எப்படி தான் சமாளிக்கிறியோ பாப்பா” என்று கவலை பட்டார். “சரி நாம வீட்டுக்கு போகலாமா? இல்ல வேற எங்கும் போக வேண்டியது இருக்கா பாப்பா?” கேட்டார்.

“போகணும் பாட்டி... வேற ஒரு ஆட் இருக்கு... அதுக்கு போகணும்” என்று கிளம்பினாள் ஆட்டோவில்.

“புள்ளபெத்த பச்சை உடம்புக்காரி நீ ஓய்வு ஒளிவு இல்லாம இந்த ஓட்டம் ஓடுற... ஆனா உன் வீட்டு ஆளுங்க யாருக்கு வந்த விருந்தோன்னு மூக்கு முட்ட நாலு நேரம் திங்கிறதையே வேலையா வச்சுக்கிட்டு இருக்காங்க... என்னத்தை சொல்ல போ. உன் வாழ்க்கை உன்ன பெத்தவங்களுக்கும் உடன் பிறந்தவங்களுக்கும் சம்பாரிச்சு குடுக்குறதுலையே தான் போகுது... உன் வாழ்க்கை மட்டும் கொஞ்சம் சரியா இருந்து இருந்தா இந்நேரம் எப்படி எப்படியோ இருந்து இருக்கும்... உன் புருசன் பெரிய ஆளுன்னு மட்டும் தெரியும். ஆனா உன் நிலைமை இப்படி இருக்கு” என்று புலம்பிக் கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தார் வராளியோடு.

ஆட்டோவில் ஏறி அமர்ந்தவளுக்கு விழியோரம் நீர் கசிந்தது.. வராளியின் கணவன் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் மிஸ்டர் உதயாதிபன். அவனை அறியாத ஆள் என்று இந்தியாவிலே ஒருவர் கூட கிடையாது.. அரசியலில் கர்ஜிக்கும் சிங்கம் அவன். அவன் ஒரு சொல் சொன்னால் போதும் அதற்கு எதிர் சொல் சட்டமன்றத்தில் எழவே எழாது. அவனுடைய தந்தை எம்பி. டெல்லி வரை பவர் இருக்கிறது.

மிகப்பெரிய அரசியல் பின்புலத்தை கொண்டவன் உதயாதிபன். அவனது அரசியல் வாழ்க்கை இன்னும் ஒளிமையமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூளையில் அன்றாட வாழ்கைக்காக போராடிக் கொண்டு இருக்கும் வராளியை அவளின் சாதகத்திற்காக ஒரு நாள் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டான். மத்திய அமைச்சகம் வரை செல்வாக்கு பெற்றவன்.

அவனது பதவியை தக்க வைக்கவும், அடுத்த கட்ட உயரத்துக்கு போகவும் அவளின் கழுத்தில் தாலியை கட்டினான் அந்த அமைச்சன். அதன் பிறகு நாலு நாள் அவளுடன் கணக்கின்றி கூடினான்... அதன் பிறகு கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இன்றி அவளை துரத்தி விட்டான். அப்படி பட்டவன் கிட்ட போய் எந்த நியாயத்தை கேட்டு வாங்கிட முடியும்.

அதற்கு கைமாறாக ஒரு கோடியை வாங்கி இருந்தார்கள் வராளியின் குடும்பத்தாரகள். அதை வைத்து வீடு தோப்பு துறவு என எல்லாம் வாங்கி போட்டு சொகுசாக இருக்கிறார்கள். ஆனால் வராளியின் வாழ்க்கை தான் முற்றிலும் மாறிப் போய் விட்டது... ஒரு வாரம் மட்டும் உதயாதிபனோடு வராளி இருந்தாள். அதன் பிறகு அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். அதில் உருவான குழந்தை தான் இவன்.

அவளது வாழ்க்கையில் என்ன நடந்தது என அறியும் முன்பே அவளது மொத்த வாழ்கையும் நிலைகுலைந்துப் போய்விட்டது. அதை எல்லாம் எண்ணி பார்த்த வராளிக்கு விரக்தி தான் எழுந்தது. அவள் யாரை குறை சொல்லி யாரை நோவது என்று கூட தெரியாமல் தன் வாழ்க்கைக்காக இதோ ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்கிறாள்.

யார் யாரிடமோ எவ்வளவோ பேச்சு வாங்கியாச்சு. ஏன் பெற்றவர்களே கண்டபடி அவளை பேசுகிறார்கள். இவளுக்கு திறமை இல்லையாம்.. “இவளுக்கு திறமை இருந்து இருந்தால் இந்நேரம் அமைச்சரின் பொண்டாட்டியாக இருந்து இருக்கலாம்... இவளை வச்சு நாமளும் முன்னேறி இருந்து இருக்கலாம்... இவளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சாமார்த்தியம் பத்தாது... போன உடனே அவன் கூட படுத்து புள்ளையை வேற பெத்துட்டா... காசு பணம் நாலு பார்ப்போம்னு இருக்கா” என்று அவளின் காது கூச பேச அதையெல்லாம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வேலை தேடி கிளம்பி விட்டாள்.

ஆனால் முழு படிப்பு படிக்காததால் அவளுக்கு பெரிதாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறாள். அதற்கும் ஆயிரம் முட்டு கட்டைகள் நடிக்கும் இடங்களில். இதோ இன்று நடந்தது போல..

வேலைக்கும் போகும் இவளின் பிள்ளையை பார்க்க கூட அங்கு யாருக்கும் மனம் வரவில்லை. இவள் தான் பக்கத்து வீட்டு பாட்டியை மாத சம்பளத்துக்கு பேசி குழந்தையை பார்த்துக்க ஏற்பாடு செய்து இருக்கிறாள்.

அதற்கும் வீட்டில் ஏகப்பட்ட திட்டு.. “நீ சம்பாரிக்கிற சம்பாத்தியத்துக்கு உன் பிள்ளையை பார்த்துக்க ஒரு ஆளு வேறயாக்கும்...” என்று நொடித்துக் கொண்ட தாயை மனம் கனக்க பார்த்தவள் யாருடைய சொல்லுக்கும் அவள் எதிர்வினை யாற்றுவதே கிடையாது.

காலையில் எட்டு மணிக்கு வீட்டை விட்டு பிள்ளையோடு வெளியே கிளம்புவாள். இரவு பத்து மணிக்கு ஆஞ்சி ஓஞ்சி மறுபடியும் வீட்டுக்கு வருவாள். அவளின் இடைவிடாத ஓட்டம் மட்டுமே எல்லாத்தையும் மறக்க வைக்கும். கூடவே அவளின் ஆறு மாதத்து மகன்... அவனின் முகத்தை பார்த்தாலே போதும் அவளின் மனம் நிறைந்து போய் விடும்.. இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் அவனை மடியில் போட்டு சீராட்டிக் கொள்வாள்.

“என்ன கண்ணு முகம் வாடி போயிடுச்சு?” என்று பாட்டி ஆதூரமாக கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி... ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாமா? பசிக்கிது. குழந்தைக்கு பால் இல்லாம போயிடும்” என்றாள்.

“அதுக்கென்ன சாப்பிட்டுட்டே போயிடலாம்... உன் மகன் பசி தாங்காம ஊரையே கூட்டிடுவான்” என்று அவனை கொஞ்சினார்.

இருவரும் சாப்பிட்டுட்டு அடுத்த ஆட் நடக்கும் இடத்துக்கு சென்றார்கள். “பாப்பா முன்ன மாதிரி ஏதாவது ஆகிடப் போகுது. துணி வச்சுக்கோ” என்றார்.

“எடுத்து வச்சு இருக்கேன் பாட்டி... அங்க ரூம்ல போய் வச்சுக்குறேன். காலையில கிளம்புற அவசரத்துல மறந்துட்டேன். ஒரு ஆட் போயிடுச்சு” என்றாள் வேதனையாக.

“பரவயில்லை பாப்பா... ஒன்னு போனா இன்னொன்னு பெருசா கிடைக்கும்.. நீ எதுக்கும் கவலை படாத..” என்று ஆறுதல் சொன்னார். அந்த பாட்டியினால் மட்டுமே வராளிக்கு கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. அவரும் இல்லை என்றால் அவளின் வாழ்க்கையை எண்ணி கூட பார்க்க முடியாது. சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர் என்றாலும் சொந்த பாட்டிபோல தான் நடந்துக்கொண்டார் அவளிடம்.

ஆட்டோ போகும் வழியில் பழுதாகி விட கைக் குழந்தையோடு இறங்கி சாலையில் நின்று இருந்தாள். அந்த நேரம் அந்த சாலையின் வழியாக பல உயர்தரம் வாய்ந்த கார்கள் சல்லு சல்லு என்று போனது.

அவளது கவனம் அதிலெல்லாம் இல்லை. கை பேசியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தாள். “சாரி சார்... வர்ற வழியில ஆட்டோ நின்றிடுச்சு... இன்னும் அறை மணி நேரத்துல எப்படியும் ஸ்பாட்டுல இருப்பேன் சார்..” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.

“உன்கூட எனக்கு பெரும் ரோதனையா போச்சு வராளி. சரி நீ ரொம்ப கட்டல்(கஷ்ட்ட)ப்படுறியே உனக்கு ஏதாவது உதவி செய்யலாம்னு சின்ன சின்ன ரோல் வாங்கி குடுத்தா நீ எல்லாத்தையும் ரொம்ப சொதப்பி வைக்கிற... உன்னால அவனுங்க கிட்ட நான் தான் திட்டு வாங்குறேன்... இனி நீயே தனியா சான்ஸ் தேடிக்க வராளி” என்று அவர் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக பேச வராளிக்கு கண்கள் கலங்கியது.

Loading spinner


   
Quote
(@gowri)
Reputable Member
Joined: 1 year ago
Posts: 301
 

இப்ப காரில் வந்து அவளை கூட்டி போவான் இல்ல உதயா....

இது முன்னாடியே படிச்சி இருக்கேனா ரைட்டர் 🤔🤔🤔🤔🤔

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top