“வராதீங்க” என்று இருந்தது. விரும்பியவளிடம் இருந்து வராதீங்க என்ற சொல் ஆணவனை கிழித்துப் போட்டது.
வரமால் போனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகிவிடுமே என்று எண்ணியவன் பெருமூச்சு விட்டு “வர வேண்டிய கட்டாயம்” என்று பதில் போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
அந்த நேரம் சரியாக ஆதினி அனைவருக்கும் காபியை கொடுத்துக் கொண்டு இருந்தாள். இவன் வீட்டுக்குள் நுழையவும் இருவரது பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீண்டது.
அந்த ஒற்றை நொடி இருவருக்கும் மரண வேதனையை கொடுத்தது. கைசேராத காதல் பல இந்த உலகில் இருக்கிறது தானே... அதில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
தன் மனம் விரும்பியவள் இன்னொருத்தனுக்கு முன்னாடி மணப்பெண்ணாய்.. யாருக்கு வாய்க்கும் இந்த பேரதிர்ஷ்ட்டம். விழிகள் கலங்கிய பொழுதும் அதை காட்டிக் கொள்ளாமல் பிரபு செல்வத்தோடு அமர்ந்துக் கொண்டான்.
அவனது முறை வர அவனுக்கும் காபி தட்டை நீட்டினாள் ஆதினி. “என்கிட்டே வராதடி.. நான் அவ்வளவு நல்லவன் இல்லை. உன்னை இப்பவே இந்த கணமே அள்ளி தோளில் தொக்கிக்கொண்டு போய்டுவேன்” என்று கதறிய உள்ளத்தை அடக்கி விட்டு இயல்பான புன்னகையுடன் மனம் நடுங்க காபி கோப்பையை எடுத்துக் கொண்டான்.
ஏனெனில் இப்பொழுது அத்தனை பேரின் கவனமும் அவர்கள் இருவர் மீது தானே இருக்கும். எனவே எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தான் பெருவளத்தான்.
அதே போல தான் ஆதினியும். எங்கே கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடுமோ என்று பயந்துப் போனாள். பெருவளத்தானை பார்க்கும் முன்பு வரை திடமாகத் தான் இருந்தாள். ஆனால் அவளின் ஒட்டு மொத்த திடமும் அவன் வீட்டுக்குள் நுழைந்த உடனே எங்கோ ஓடிப்போய் ஒளிந்துக் கொண்டது.
பார்த்து பார்த்து காதலித்த நொடிகள் எல்லாம் இதோ இந்த நிமிடத்துடன் முற்றுப்பெற போகிறது. காதலனை வைத்துக் கொண்டே இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லணும். கொடுமையிலும் கொடுமை.
எல்லோரிடமும் வேகமாக நகர்ந்த நொடிகள் ஏனோ பெருவளத்தானை கடக்கும் பொழுது மட்டும் நின்று நிதானமாக கடப்பது போல ஒரு உணர்வு. இந்த வேதனை வேறு யாருக்கும் வந்து விட கூடாது கடவுளே என்று எண்ணிக்கொண்டாள்.
பேச்சு வார்த்தை எல்லாம் நிறைவாக முடிந்தது. வருகிற முகூர்த்தத்தில் ரெஜிஸ்டர் ஆபிசில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட,
“ரெஜிஸ்டர் ஆபிசா?” என எல்லோரும் திகைக்க,
“ஆதினி தான் சொன்னாங்க. எதுக்கு வீண் செலவுன்னு. அதோட எனக்கும் அந்த கான்சப்ட் பிடிச்சி இருந்தது. சோ அங்கயே கல்யாணத்தை பண்ணிடலாம்” என்று மாப்பிள்ளை சொல்ல எல்லோரும் ஆதினியை திரும்பிப் பார்த்தார்கள்.
“இல்ல தேவையில்லாத செலவு, அதோட அங்கும் இங்கும் அலையணும், பெரிய அக்காவுக்கு குழந்தை இருக்கு, சின்ன அக்கா இப்போ தான் மூணு மாசம். இந்த சமயத்துல அங்கும் இங்கும் எதுக்கு அலைச்சல்னு தான்” என்று அவள் சொல்ல அவளின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும் அவளது வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்தவர்களுக்கு அவளின் காயம் நன்கு புரிந்தது.
விசாகன் கனத்த மனதுடன் ஆதினியை பார்த்தார். ஆதினி யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்த்தால் அவளின் நிலமை தலைகீழ் ஆகும் என்று தெரியாதா. அதனால் நிமிரவே இல்லை. பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்து எல்லோரும் உணவு உண்டு முடித்து மாப்பிள்ளை வீட்டார்கள் கிளம்பிவிட வீட்டு ஆட்களும் இரு சம்மந்தி வீட்டு ஆட்களும் மட்டுமே இருந்தார்கள். அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.
என்னவோ இன்னைக்கே ஆதினியின் கல்யாண வைபோகம் போல எல்லோரிடமும் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது.
“ம்ஹும் நான் கூட முகூர்த்த கால் ஊன்ற, சடங்கு செய்ய, முகூர்த்த புடவை எடுக்க, சமாசெட்டு எடுக்க, பத்திரிக்கை அடிக்க அது இதுன்னு நிறைய நிகழ்ச்சி நடக்கும்னு ஆசையா இருந்தேன் சம்மந்தி. இப்படி பொசுக்குனு போயிடுச்சு அது ஒன்னு தான் குறை. மற்ற படி மாப்பிள்ளை கண்ணுக்கு லட்டச்சனமா இருக்காரு” என்று செல்வத்தின் அம்மா சொல்ல எல்லோருக்குமே அந்த மனக்குறை இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
சரி கிளம்புறோம் என அனைவரும் கலைந்து செல்ல வீடே வெறிச்சோடிப் போய் இருந்தது.
“இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் ஆதினியும் அவ வீட்டுக்கு போயிடுவா... கனிகாவும் அவ வீட்டுக்கு போயிடுவா. சஞ்சு இன்னைக்கே அவங்களோட போயிட்டா.. இனி இந்த வீட்டுல விதுலும் நாம மட்டும் தான் இருக்கணும் இல்ல” என்ற அழுத கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு கேட்ட குமுதாவை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள் ஆதினி.
“ம்மா” என்று அவள் அதட்ட,
“இல்லடி உண்மை அது தானே... உங்களை எல்லாம் கைக்குள்ள வச்சே வளர்துட்டனா... அது தான் என்னவோ மாதிரி இருக்கு... அவளுங்க ரெண்டு பேரும் கூட ரொம்ப நேரம் இருந்துட்டேன். ஆனா நீ படிக்க வெளிய போகவும் உன் கூட என்னால அதிக நேரம் இருக்கவே முடியலடி. இப்போ வேலைக்கு போகவும் இன்னும் அதிக இடைவெளி வந்த மாதிரி இருக்கு” என்றவரின் மடியில் படுத்துக் கொண்டாள்.
“அவளுங்க எதா இருந்தாலும் வாய் விட்டு இது தான் வேணும்னு கேட்டுடுவாளுங்க. ஆனா உனக்கு ஒன்னு ஒன்னும் நான் பார்த்து செய்யணும்.. இனி அதெல்லாம் செய்ய முடியாது இல்ல...” என்று சொல்லும் பொழுதே அவருக்கு இன்னும் கண்ணீர் வர ஆதினி தன் அழுகையை அவரின் மடியில் புதைத்துக் கொண்டாள்.
“குமுதா இப்போ ஏன் நீ அழுது பிள்ளையையும் அழவைக்கிற. முதல்ல கண்ணை துடை. பாப்பாவை பாரு” என்று வைகுந்தன் அதட்ட சட்டென்று இருவரும் தங்களை மீட்டுக் கொண்டார்கள்.
கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி கனிகாவை காணோம். அன்றைக்கு வைகுந்தமும் குமுதாவும் மார்கெட் போய் இருக்க கனிகா மட்டும் வீட்டில் இருந்தாள். “கவனமா இருடி. காய் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு போனவர்கள் திரும்பி வந்து பார்த்தால் வீட்டில் யாருமே இல்லை. கதவு பூட்டி இருக்க சாவி எப்பொழுதும் வைக்கும் இடத்தில் இருந்து எடுத்து திறந்தவர்களுக்கு பக்கென்று இருந்தது.
கனிகா சம்மந்தமான எந்த பொருளும் இல்லை. அதே போல குழந்தைக்கு உரிய எந்த பொருளும் இல்லை.
“என்ன இது” என்று அதிர்ந்தவர்கள் உடனே ஆதினிக்கும் பெருவளத்தானுக்கும் போன் போட்டு விவரத்தை சொல்ல அடித்து பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.
“என்ன அத்தை சொல்றீங்க... நல்லா தேடி பார்த்தீங்கலா? அவ அப்படி எல்லாம் எங்கும் போய் இருக்க மாட்டா. அவளுக்கு அவ்வளவு விவரம் எல்லாம் போதாது” என்று உருகிய பெருவளத்தானை கண்டு மனம் கனத்துப் போனது மூவருக்கும்.
“ஆமாம்மா அவ அப்படி எல்லாம் எங்கும் போய் இருக்க மாட்டா” இருங்க அவளோட அறையை சோதனை செய்து பார்க்கலாம் என்று கனிகாவின் அறையை பார்க்க அங்கே துடைத்து வைத்தது போல இருக்க ஆதினி பெருவளத்தனை பார்த்தாள்.
“ஒருவேளை உங்க வீட்டுக்கு எதுவும் போய் இருக்காளா? மாமாக்கிட்ட கேட்கிறேன்” என்றவள் விசாகனுக்கு போன் போட்டு மேலோட்டமாக அவருக்கு ஐயம் வராத அளவுக்கு கேட்டாள்.
“இல்லம்மா வரலையே” என்று அவர் சொல்ல, தன்னை பதிலுக்காக பார்த்துக் கொண்டு இருந்த பெருவளத்தானுக்கு இல்லை என்பது போல தலையை அசைத்தாள். அந்த நேரம் சஞ்சு மாமனாரிடம் இருந்து போன் வந்தது.
“சம்மந்தி” என்று வைகுந்தம் பேசும் பொழுதே,
“நீங்க எல்லோரும் இங்க வீட்டுக்கு வாங்க” என்று சொல்லி பட்டென்று வைத்து விட்டார். அவர் அப்படி சொல்லவும் இன்னும் வயிற்றில் புளியை கரைத்தது அனைவருக்கும்.
“ஒரு வேலை கனிகா பிள்ளையோடு ஓடிப் போன விசயம் தெரிந்து இருக்குமோ. நம்ம மேல போலிஸ் கம்ப்ளைன்ட் குடுப்பாங்களோ” என்று குமுதா பயப்பட,
“ம்மா அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. முதல்ல அங்க போய் பார்ப்போம். அதுக்கு பிறகு என்ன ஏதுன்னு முடிவு பண்ணிக்கலாம்” என்றவள் கார் சாவியை எடுத்த பெருவளத்தனிடம் இருந்து பிடுங்கிக்கொண்டாள்.
“இல்ல நீங்க ஓட்ட வேண்டாம்.. உங்க கைகள் எல்லாம் ஆடுது” என்று அவள் வாங்கிக்கொள்ள பெருவளத்தானுக்கு எதுவும் புரியவில்லை. உணர்வுகள் எல்லாம் மறுத்துப் போன நிலையில் இருந்தான் அவன்.
அட ரைட்டர்! இந்த கோனி ஏன் இப்படி எல்லாம் செய்து????
ஒரு வேலை செல்வம் கூட வாழ போயிட்டாலோ????
அப்ப வளத்தான் நிலை?????





