Notifications
Clear all

அத்தியாயம் 11

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 977
Topic starter  

ராஜாவிடம் பேசிய பொழுது அவன் கேட்ட கேள்விக்கான பதிலை சொல்ல முடியாமல் போனை அனைத்துவிட்டு மயக்கத்துடன் படுக்கையில் கிடந்தவளை பார்த்தவனுக்கு நெஞ்சம் கணத்துப் போனது.

அவனுக்கு விவரம் தெரிந்த வரையில் அன்னையின் மடியை தவிர வேறு யாரிடமும் நெருங்கிப் பழகினது இல்லை.

எல்லோரையுமே ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிறுத்தி வைத்து இருந்தான். ஆனால் அது அவனின் இரு நண்பர்களிடமும் பலிக்கவில்லை. நீ ஓரடி எட்டி நின்னா நாங்க இன்னும் இரண்டடி உன்னை நெருங்கி வருவோம்னு நெருங்கி வந்து அவனை டார்ச்சர் செய்ய, ஆதி அவன் போட்ட வட்டத்தை கலைக்காமல் தன் வட்டத்துக்குள் இவர்களை இழுத்துக் கொண்டான்.

ஆனால் அது அவர்களின் இரு தங்கைக்கும் மறுக்கப்பட்டது. குறிப்பாக அபிராமி. அவளின் கண்களில் தென்பட்ட ஆர்வத்தை முறைத்தே கறுக்கி விட்டு இருந்தான் ஆதி.

மகரியாளோ ராஜாவின் பேச்சில் அடிக்கடி வரும் ஆதியை உள்ளுக்குள் சுமந்து கரைக்காணாத காதலை அதிகமாக வளர்த்துக்கொண்டாள். அதை அவனிடம் பெரிதாக காட்டியதே இல்லை.

மூவரின் பெற்றவர்களும் உயிரோடு இருக்கும் வரை வாரம் ஒரு முறை குடும்பத்தோடு மீட் பண்ணி, டின்னெர் பார்ட்டி ஏற்பாடு செய்து தங்களின் நட்புகளை கொண்டாடிக் கொண்டார்கள்.

பெரிய நாள் நல்ல நாள் எதுவாக இருந்தாலும் மூவரின் வீட்டுக்கும் ஒரு நடை போயிட்டு வருவார்கள். அத்தனை ஒற்றுமையாக இருந்ததால் அடிக்கடி ஆதியை சந்திக்க பல வாய்ப்புகள் கிட்டியது மகரியாளுக்கு.

அண்ணனின் வாய் மொழியாக பல செய்திகளை கேட்டாலும் நேரில் ஆதியை பார்த்ததால் அவனின் தோற்றம், பேசும் தோரணை, கம்பீரம், அன்னையிடம் அவன் அடங்கிப்போவது என பல வகையில் பெண்ணவளை ஈர்த்து இருந்தான்.

அப்போதே மகரியாள் பார்வையை இனம் கண்டுக் கொண்ட ஆதியின் அம்மா,

“என்னடி மருமகளே..” என்று கேலி செய்ய தொடங்கி விட்டார்.

“அத்தை சும்மா இருங்க. உங்க மகனுக்கு மட்டும் இது தெருஞ்சது என்னோட சேர்த்து உங்களையும் வெளில துரத்தி விட்டுடுவாரு..” எச்சரித்தாள் மகரி.

“போடி என்னைக்கா இருந்தா இருந்தாலும் நீ தான் என் வீட்டு மருமக... யாருக்கு குடுத்து வச்சு இருக்கோன்னு கவலை பட்டேன். கடைசில என் அண்ணன் பொண்ணே எனக்கு மருமகளா வருவான்னு நான் நினைச்சு கூட பார்க்கல. ஆனா இதுவும் நல்லா தான் இருக்குல்ல” என்றவரை முறைத்துப் பார்த்த மகரி,

“நீங்களே மருமக மருமகன்னு உங்க மகன் கிட்ட காட்டி குடுத்துடுவீங்க போலையே. அபிராமி லேசா ஒரு பார்வை தான் பார்த்தா உங்க மகனை. உடனே அந்த உத்தமர் இங்க பாரு நான் உனக்கு அண்ணன் மாதிரி.. சாரி அண்ணன் மாதிரி இல்ல அண்ணனே தான்னு.. அவளை கூப்பிட்டு வச்சு நானூறு பக்கத்துக்கு அறிவுரை வழங்கி இருக்காரு உங்க மகன். இதுல என் விசயம் தெரிஞ்சு என்னையும் கூப்பிட்டு வச்சு, நீ எனக்கு தங்கச்சி மாதிரி, தங்கச்சி மாதிரி இல்ல.. தங்கச்சியே தான்னுன்னு சொன்னாருன்னு வைங்க, அப்பவே என் நெஞ்சு டமார்னு வெடிச்சு செத்து போயிடுவேன். அப்புறம் உங்க மகன் கொலை கேசுல ஏழு வருசம் களி திங்க வேண்டி இருக்கும். வாழ வேண்டிய வயசுல இதெல்லாம் தேவையா?” என்றவளை போலியாக முறைத்தார் ஆதியின் அம்மா.

“நல்லா வாய் பேசுறடியம்மா..” என்று சொன்னவர், அவளின் மோவாயை பிடித்து ஆசையாக கொஞ்சி,

“உண்மையாவே உனக்கு ஆதியை பிடிச்சு இருக்கா கண்ணா?” கேட்டார்.

“ஏன் அத்தை அப்படி கேக்குற? எனக்கு உங்க மகன்னா ரொம்ப ரொம்ப புடிக்கும்.. சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்கேன் அவரை. என்னவோ என் மனசு அவருன்னு பிக்ஸ் ஆகிடுச்சு.. அதை மாத்தி எல்லாம் எழுத முடியாது” என்றவளின் முகத்தோடு முகம் வைத்து கண்கள் கலங்கினார்.

“அவன் ரொம்ப நல்லவன் கண்ணா” என்று அவர் சொல்ல,

“ஹலோ போதும் உங்க மகனுக்கு நீங்க ஒன்னும் செர்டிபிகேட் குடுக்க வேணாம். உங்க மகன் பண்ற எல்லா தில்லாலங்கடி வேலையும் எனக்கு தெரியும்.. அதனால ரொம்ப ஐஸ் வைக்க வேணாம்” என்றவளை அவருக்கு ரொம்ப புடிச்சு இருந்தது.

“எத்தனை தெரிஞ்சுமா அவனை காதலிக்கிற?” ஆச்சரியமாக கேட்டார்.

“ம்ம்.. கொஞ்சம் முசுட்டு மூஞ்சி, சிரிச்சு பேச தெரியாது.. கோவம் நிறைய வரும்.. ஆனா அதுக்காக எல்லாம் என் காதலை விட்டுக் குடுக்க முடியாதுல்ல அத்தை” என்றபொழுது அவருக்கு அத்தனை நிறைவாக இருந்தது.

“உன் வயசு என்னடி இப்பவே இந்த பேச்சு பேசுற?” முறைத்தார்.

“நான் தான் வயசுக்கு வந்துட்டனே அத்தை. அதனால தாராளமா பேசலாம்” என்றவளின் பேச்சில் சிரிப்பு வர,

“சேட்டை” என்று செல்லமாக கடிந்துக் கொண்டாலும் ஏனோ மகரியை தவிர வேறு ஒரு பெண்ணை தங்களின் மருமகளாக அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே போல ஆதியின் பக்கத்தில் வேறு ஒரு பெண்ணை கற்பனையால் கூட கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை.

“ரெண்டு பேரும் நல்லா இருந்தா போதும் கண்ணா.. எனக்கு அதை விட வேறு என்ன வேண்டும்” என்று எண்ணிக் கொண்டார். அப்படி அவளின் சின்ன வயதில் இருந்தே ஆதியின் நினைவில் வாழ்ந்தவள்.

அவளின் விடாத பார்வை ஒரு கட்டத்தில் ஆதியை துளைத்து எடுக்க, சுதாரித்துக் கொண்டவன் அவளை அழைத்து வைத்து பாடம் எடுக்க ஆரம்பிக்க,

“நான் லைசென்ஸ் ஓட தான் உங்களை பார்க்கிறேன். சோ அபிக்கிட்ட சொன்ன மாதிரி நான் உன் அண்ணன், நீ என் தங்கச்சின்றற டைலாக் எல்லாம் வேணாம்” என்றவளை கடுப்பாக முறைத்தவன்,

“என்னடி வயசு ஆகுது அதுக்குள்ள காதல் கீதல்னுக்கிட்டு.. ஒழுங்கா படிக்கிற வயசுல படி..”

“நான் எல்லா பாடத்திலும் சென்ட்டம்” என்றாள் துடுக்காக.

“ஓகோ.. அதுக்காக லவ் பண்ணுவியா?” அடக்க மாட்டாமல் அவளிடம் தன் கோவத்தை காட்டினான் ஆதித்யன்.

“அதுக்காக லவ் பண்ண வேணாம். பட் என்னால லவ் பண்ணிக்கிட்டே படிக்கவும் முடியும்னு சொன்னேன்” என்றாள்.

“அடி வாங்க போராடி” அடிக்குரலில் உறுமினான்.

“அத்தை இங்க வாங்க” என்று ஆதியின் அம்மாவை மறைவில் இருந்து இழுத்து அவனுக்கு முன்னாடி நிப்பாட்டினாள்.

தன் தாயும் இந்த செயலுக்கு உடந்தை என்று அறிந்தவன் அவரையும் பாராபட்சம் பார்க்காமல் முறைத்து தள்ளினான்.

“என்னம்மா இதெல்லாம். அவ தான் சின்ன பிள்ளை. எதோ அறியாம விளையாட்டு தனமா செய்துக்கிட்டு இருக்கான்னா.. நீங்க வீட்டுக்கு பெரியவங்க வயசுல பெரியவங்க என்ன செய்யணும். இதெல்லாம் தப்புன்னு எடுத்தது சொல்ல வேண்டாமா?” கடுப்படித்தான்.

“இல்ல ஆதி அது வந்து” என்று அவர் தடுமாற,

“நீங்க என்ன சொன்னாலும் இது தப்பு” என்றவனின் முன்பு இருந்த தன் அத்தையை முழுமையாக மறைத்துக் கொண்டு வந்து நின்றவள்,

“இங்க பாருங்க மாமா..” என்று அவள் ஆரம்பிக்க,

“மாமா ஓமான்னுக்கிட்டு வந்த பல்லை பெயர்த்து விடுவேன்டி” உறுமினான்.

“ம்கும்.. நான் மாமா போடக்கூடாதாம். ஆனா இவர் மட்டும் கட்டுன பொண்டாட்டி மாதிரி டி போட்டு பேசுவாராம். பார்த்தீங்களா உங்க புள்ளையோட இலட்சணத்தை..” சிலிர்த்துக் கொண்டவள்,

“மாமா நான் பிக்ஸ் ஆகிட்டேன். இன்னும் நூறு வருடத்துக்கு நீங்க தான் எனக்கு. நான் தான் உங்களுக்கு. அதை மாத்த யாராலும் முடியாது” என்றவள் கொஞ்சம் இடை வெளி விட்டு, அவனை நெருங்கி வந்து குரலை தாழ்த்தி,

“ஐ லவ் யூ மாமா” என்று சொன்னவள், அவன் கொஞ்சமும் எதிர்பாரா நேரத்தில் அவனின் அரும்பு மீசையும் அணலும் வளர்ந்துக் கொண்டு இருந்த கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ்களை புதைத்து சற்றே சத்தமுடன் முத்தம் கொடுத்து விட்டு ஓடியே போய் இருந்தாள்.

ஆதி தான் அவளின் செயலில் திகைத்துப் போய் நின்றான் சில கணங்கள்.

அவள் இதழ்களின் ஈரம் இன்னும் கன்னத்தில் ஒட்டி இருப்பது போல அழுந்த துடைத்தவனின் விழிகள் ஏகத்துக்கும் சிவந்துப் போய் தன் அன்னையை முறைத்துப் பார்த்தான்.

“பார்த்தீங்களா நீங்க இருக்கும் பொழுதே அவ என்ன காரியம் செஞ்சுட்டு போய் இருக்கான்னு. இவளை எல்லாம் கட்டி வச்சு உதைக்கணும்” என்று உருமியவனை சமாதனம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது அவருக்கு..

அன்றிரவு,

“அவ ரொம்ப நல்ல பொண்ணுடா” என்று மகனின் தலையை தடவி விட்டுக் கொண்டு அவர் சொல்ல, அவரின் மடியில் இன்னும் சொகுசாக படுத்துக் கொண்டவன்,

“அவ பேச்சை எடுக்காதீங்க ம்மா” எரிச்சல் பட்டான். இப்பொழுதும் அவனது கை அவனது கன்னத்தை அழுந்த தேய்த்துக் கொண்டது.

என்னவோ அந்த இடத்தில் ஊரும் உணர்வாகவே இருந்தது. அவளின் இதழ் ஈரம் இன்னும் இருப்பது போலவே தோன்றியது. அதனால் பரபரவென்று துடைத்துக் கொண்டான். அவனின் செயலில் அவனது அன்னை வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தார்.

“உனக்கு ஏற்ற சரியான இணை மகரி மட்டும் தான்டா.. இனி நீ அவளை மறக்கணும்னு நினைச்சாலும் அவளோட முத்தம் உன்னை மறக்க விடாது. அதைதான் அவளும் செய்துட்டு போய் இருக்கா” என்று அவளின் உணர்வுகளையும் படம் போட்டு காட்டினார் தன் மகனுக்கு.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top