Notifications
Clear all

அத்தியாயம் 51

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஆங்... நீரு வெறும் காபி தண்ணி கேட்டு இருந்தா நாங்க குடுத்து இருப்போம்... நீரு எதுக்குய்யா எங்க மவனை இழுத்த.... நாங்களே ஒரே ஒரு மகனை குருத்து கணக்கா பெத்து போட்டு இருக்கோம்... உனக்கு ஏன் கண்ணு உறுத்துது...”

“அடியேய் ரெண்டு பேரும் சேர்ந்து ஒத்த புள்ளைய பெத்து போட்டுட்டு என்ன வக்கனையா பேசிகிட்டு திரியிரிகளா...?” கடுப்படித்தார்.

“ம்கும்... ரொம்ப தான்... அந்த ஒண்ணுக்கே தான் சொத்து பத்து பத்தல... இதுல நாங்க வரிசையா பெத்து போட்டா நாளே நாளுல தெருவுல நிக்க வேண்டியது தான்.” என்றார் ராக்காயி.

“அடிப்பாவி...” என்று வாயில் கைவைத்து அமைதியாகிவிட்டார் நின்ற பாண்டியர்.

‘பின்ன ஐநூறு ஆயிரம் ஏக்கர் வைத்து இருப்பவரை பார்த்து இப்படி சொன்னால் மனிதரால் பேச தான் முடியுமா...? என்ன’ அரண்டு போய் விட்டார் நின்ற பாண்டியர்.

‘நான் ஏன் தாலி கட்டுனேன்னு இத்தனை வருஷம் கழிச்சு யோசிக்க வச்சுடீன்களேடி..’ என்று நொந்து போனார் ஒரு வாய் காபி தண்ணிக்கு.

அந்த நேரம் மீனாச்சியம்மை அனைவருக்கும் சேர்த்து காபி கலந்து எடுத்துக்கொண்டு வந்தார். அவரை அன்பாய் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே எடுத்துக்கொண்டார் வெள்ளியம்பலத்தார்.

அந்த பார்வையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து போன மீனாச்சி நெகிழ்வுடன் அனைவருக்கும் காபி கொடுத்தவர், தன் மருமகளுக்கு மட்டும் சண்ட காய்ச்சிய பாலில் பனவெல்லம் தட்டி போட்டு கொஞ்சம் பாதம் பிஸ்தா தூவி கொடுக்க, பொழிலிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

வியந்து போய் அவரை ஏறிட்டு பார்த்தாள்.

“இளஞ்சூடா ஆத்தி வச்சு இருக்கேன்... குடுச்சுடு தாயி..” என்று சொன்னவர் தானும் அவளின் அருகில் அமர்ந்துக்கொண்டு தனக்கொன்ரை எடுத்து அருந்த ஆரம்பித்தார்.

ராக்காயும் பிச்சாயும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொண்டு அர்த்தமாக தலையாட்டி கொண்டார்கள். அதை நின்ற பாண்டியரும் உணர்ந்துக்கொண்டவர் மீசையை முறுக்கிக்கொண்டார்.

இனி எல்லாம் சரியாகும் என்று...

நடு சாமத்தில் வீட்டில் இருந்த அத்தனை பேரும் ஒன்று கூடி பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் அனைவரின் நெஞ்சிலும் நீங்க இடம் பிடித்தது... 

மெல்ல பொழிலியின் கரம் பாண்டியனின் கரத்தை தேடி சிறை செய்தது. ஒரு நொடி சிறை இருந்தவன் அடுத்த நொடி வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டான் யாருமறியாமல்.

‘போய்யா ரொம்ப தான் பண்ற..’ கடுப்படித்தவள், அவனின் இடுப்பில் நறுக்கென்று கிள்ளிவிட்டு அப்பத்தாவின் தோளில் சாய்ந்துக்கொண்டாள் நமட்டு சிரிப்புடன்.

‘எல்லாருக்கும் முன்னாடி என்ன வேலை செஞ்சி வைக்கிரா இவ...’ பல்லைக் கடித்தவன் அமைதியாக இருந்தான்.

ஆனால் அவள் சும்மா இல்லாமல் அவனை ஏதாவது செய்து சீண்டிக்கொண்டே இருந்தாள். அவனின் காலை சுரண்டுவதும், கையில் சுருண்டு இருந்த முடியை இழுத்து விடுவதும், அவனது உடையின் ஓரத்தை பிடித்து முறுக்குவதுமாக இருந்தாள்.

கொஞ்ச நேரம் அவனும் பொருத்து பொருத்து பார்த்தான். ஆனால் அவனது கை அவனது பேச்சை கேட்காமல் தானாகவே அவளது வெற்று இடுப்பை நோக்கி சென்றது.

பட்டென்று இறுக்கி அவளது இடுப்பை பிடித்தவன் தன் உணர்வு மொத்தமும் அதில் இறக்கியவன் அழுத்தி சட்டென்று களிமண் போல பிசைந்து விட, அதுவரை மற்றவர்களோடு பேசிக்கொண்டு இருந்தவள் ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தியே விட்டாள்.

அந்த அளவு அவனது பிடி இருந்தது... உடல் சிலிர்த்து அடங்கியது... ஒரு நொடி தொடுகையில்.

“இப்போ சீண்டு டி பார்க்குறேன்...” காதோரம் கர்ஜித்தவன் இன்னும் வாகாக அவளது இடையில் கை போட்டு அழுத்தி நெருக்கி இறுக்கி பிடித்துக்கொண்டு கூச்சமூட்டி விளையாட ஆரம்பிக்க தவித்து போனாள்.

முகத்தில் எந்த சங்கடத்தையும் காட்டிக்கொள்ளாமல் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தவளுக்கு அவனது தொடுகை உயிர் வரை சிலிர்க்க செய்ய, அஞ்சன கயல்கள் சிவந்து போனது.

“என்னங்க அம்மணி இவ்வளவு நேரம் எல்லாத்துக்கிட்டயும் சொல்லி பஞ்சாயாத்து கூட்டிட்டு இருந்திங்க.. இப்போ பேசுடி...” என்று கிள்ளியும் விட, கம்பி வேலியில் கை விட்ட கணக்காய் சிரித்து வைத்தாள்.

“என்னடி சிரிப்பு... பதில் சொல்லுடி...” இன்னும் சுக வேதனை கொடுத்தான் அவளுக்கு.

அதுவரை அமைதியாக இருந்த பொழிலி யாருடைய கவனமும் கவராமல் இதழ்களை பிரிக்காமல் காலில் உள்ள மெட்டியை சரி செய்வது போல அவனது புறம் லேசாய் சரிந்து,

“தோத்து போயிட்டு எதுக்கு இந்த சவடால்... போங்க போய் படுக்கையை தயார் பண்ணி வைங்க... எப்படியும் இன்னைக்கு கட்டில் தாங்காது... நீங்க இருக்க வேகத்துக்கு... அதனால தரையில படுக்கையை விரிச்சு போட்டுட்டு கூப்பிடுங்க...” என்று மிகவும் திமிராய் சொல்ல, பாண்டியனின் கண்கள் ஆசையில் ஒரு கணம் மின்னியது பயங்கரமாக.. அடுத்த நொடி அவள் போட்ட ஆணையில் ஆணவனின் இதழ்களில் ரகசியமாகவும் ரசிப்புமாகவும் ஒரு புன்னகை விரிந்தது...

“யாருடி தோத்து போனா...? நானா... இல்ல நீயா...?” கடுப்படிப்பது போல பல்லை கடித்துக்கொண்டு கேட்டான்.

“பின்ன இல்லையா...? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி படுத்து இருக்கும் பொழுது உங்களால என்னை தொடாம இருக்க முடியாதுன்னு சொன்னேன். என்னால முடியும்னு சொல்லி தள்ளி போய் படுத்தீங்க, பொறவு கோவமா வெளிய போனீங்க... இப்போ அந்த மானஸ்த்தன் என் இடுப்ப புடிச்சு உடைச்சுக்கிட்டு இருக்காரு...”

“அப்போ தோத்ததா தானே அர்த்தம்...” என்றாள் நக்கலாக...

“ஏய்...” என்றான் காண்டாக.

“ம்கும் இப்படி காண்டாகி கிட்டே இருங்க... அதுக்கு தான் நீங்க பொருத்தமா இருப்பீங்க...” மேலும் நக்கல் பண்ணினாள்.

“ஏய்... வாயை மூடுடி...” கர்ஜித்தான் அவளின் காதோரம்..

“முடியாது மாமா... வேணா நீங்களே மூடுங்க...” அவனின் முரட்டு இதழ்களை பார்த்துக்கொண்டே பொழிலி சொல்ல, பாண்டியனின் நெஞ்சில் காதலின் சாரல் தெரித்தது.

அதற்கு பதில் சொல்லும் முன்பே,

“அய்யாரு செவுனப்பன் எப்ப வராகன்னு கேட்டியா கண்ணு...” என்று நின்ற பாண்டியர் தன் பேரனிடம் கேட்டார்.

“நானே அவருக்கிட்ட பேசிட்டேன் ஐயா... நாளைக்கு காலம்பர மலைச்சாமி அவரை அழைச்சுக்கிட்டு வந்துடுவான்... கவலை இல்லை” என்றார் வெள்ளியம்பலத்தார்.

“அப்படி சொல்ல முடியாது அய்யாரு....” என்றார் ராக்காயி.

“ஏன் அத்தை...?”

“உனக்கு தெரியாது மீனாச்சி செவுனப்பனை பத்தி... அந்த அய்யனுக்கு இந்த ஆடம்பரம் வசதி எல்லாம் ஒரு பொருட்டே இல்ல.... அதோட இதை கண்டு மிரட்சி யா தான் இருக்கும்...”

“நம்மக்கிட்ட அம்புட்டு சுலபமா பேசிட மாட்டாரும்மா... அங்க இருக்கும் பொழுது என் கையை தொடவே அவ்வளவு யோசிச்சாரு...” என்று பொழிலியை பார்த்துக்கொண்டே சொன்னான் பாண்டியன்.

அன்றைக்கு அவனது கையை தொட கூட தயங்கிய தன் தகப்பனின் நிலையை கண்டு கலங்கி நின்றாள் தானே... அதை அறிந்தவனாய் இன்று சொல்ல பொழிலி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கு ஏழை பணக்காரன் வித்தியாசமெல்லாம் பார்க்க தெரியாது...” என்று சொன்னவன்

“அதுவும் நீன்னு வரும்பொழுது...” இரு பக்கமும் தலையசைத்து சொன்னான். அதில் அவனது உள்ளம் நன்கு புரிந்தது அவளுக்கு. சட்டென்று அவனது தோள் சாய்ந்துக்கொண்டாள் கலங்கிய கண்களுடன்.

மீனாச்சியம்மை அவளது தலையை வருடி கொடுத்தார் கொஞ்சம் தயக்கத்துடன். அதில் வேகமாய் அவரது தோளில் சாய்ந்து கதறி அழுதாள்.

அவளுக்குள்ளும் இந்த ஏற்ற தாழ்வு துரும்பு பானகமாய் உறுத்திக்கொண்டு தானே இருக்கிறது... அதை பற்றி பேச்சு வந்தவுடன் தன் உள்ள கிடங்கின் அழுத்தம் தாழாமல் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : January 6, 2026 9:46 am
(@megalaveera)
Trusted Member

Nice 

Loading spinner

ReplyQuote
Posted : January 27, 2026 10:44 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top